2024 நாடாளுமன்றத் தேர்தல்! பெரம்பலூரில் களமிறங்குகிறாரா அமைச்சர் கே.என்.நேரு மகன்! பின்னணி என்ன?
திருச்சி: திமுக முதன்மைச் செயலாளரும், மூத்த அமைச்சருமான கே.என்.நேருவின் மகன் அருண் நேரு, வரும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது அரசியலில் தந்தை கே.என்.நேருவுக்கு உதவியாக இருந்து வரும் அருண் நேரு, கட்சியினர் வீட்டு நிகழ்ச்சிகளில் தவறாமல் தலைகாட்டி வருகிறார்.
அருணின் அரசியல் வருகை அமைச்சர் கே.என்.நேரு ஆதரவாளர்களை உற்சாகம் கொள்ள வைத்துள்ளது.

மூத்த அமைச்சர்
தமிழக அமைச்சரவையில் மூத்த அமைச்சர்களில் ஒருவரும், திமுக முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு, கடந்த 2 ஆண்டுகளாக தனது மகன் அருண் நேருவுக்கு அரசியல் பயிற்சி வழங்கி வருகிறார். தாம் ஊரில் இல்லாத நாட்களில் கட்சியினர் இல்ல நல்லது கெட்டதுகளில் மகனை பங்கேற்க வைப்பது, கட்சியினரை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை தீர்க்க வைப்பது என மகன் அருண் நேருவை நேர்த்தியான அரசியல்வாதியாக உருவாக்கி வருகிறார் அமைச்சர் நேரு.

நாடாளுமன்றத் தேர்தல்
இதனிடையே திமுகவில் எந்தப் பொறுப்பிலும் இல்லாத அருண் நேருவை, அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் கட்சி போஸ்டர்களிலும், சுவரொட்டிகளிலும் முன்னிலைப்படுத்தி வருகின்றனர். வரும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அருண் நேருவை களமிறக்க வேண்டும் என இப்போதே அமைச்சர் கே.என்.நேருவிடம் ஆதரவாளர்கள் தூபம் போட ஆரம்பித்துவிட்டனர். தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருப்பதால் இது பற்றி அமைச்சர் நேரு அலட்டிக் கொள்ளவில்லை எனத் தெரிவிக்கிறார்கள் உள்விவரம் அறிந்தவர்கள்.

அன்புத் தொல்லை
ஆனால் ஆதரவாளர்களின் நச்சரிப்பு தான் அதிகமாக உள்ளதாம். 'தம்பியை எம்.பி.தேர்தலில் களமிறக்க வேண்டும்' என ஆதரவாளர்கள் அன்புத் தொல்லை கொடுப்பதால் விரைவில் இது குறித்து நேரு உறுதியான முடிவெடுக்கக் கூடும் எனத் தெரிகிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு வேளை நேருவின் மகன் போட்டியிட்டால் பெரம்பலூர் தொகுதியில் தான் போட்டியிடுவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே இந்தத் தொகுதியின் எம்.பி.யாக, நேருவின் அக்கா மகனும் நடிகருமான நெப்போலியன் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தொழில்
சித்தப்பாக்களோடு இணைந்து சென்னையில் கட்டுமானத் தொழில் செய்து வரும் அருண் நேரு, இப்போதெல்லாம் திருச்சியில் தான் அதிகம் தங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மகனை அரசியலுக்கு கொண்டு வர அமைச்சர் நேருவுக்கு ஆரம்பத்தில் விருப்பம் இல்லாவிட்டாலும் கூட ஆதரவாளர்களின் ஆர்வத்தை அறிந்து அவரும் கிரீன் சிக்னல் கொடுத்ததாக கூறுகிறார்கள் உள்விவரம் அறிந்தவர்கள்.












Click it and Unblock the Notifications