ஒப்பந்தப் பணியை முடித்து 3 வருசமாச்சு! இன்னும் பணம் தரவில்லை! கே.என்.நேரு காரை மறித்த அதிமுகவினர்!
திருச்சி: திருச்சி மாவட்டம் துறையூரில் அமைச்சர் கே.என்.நேருவின் காரை அதிமுகவினர் திடீரென மறித்ததால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அமைச்சர் நேரு தனக்கே உரிய பாணியில் தனது காரை மறித்த அதிமுகவினரிடம் சகஜமாக பேசி, சிரிப்பலையை உருவாக்கி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரும் ஒப்பந்தப் பணிகளை எடுத்திருந்த ரமேஷ் மற்றும் செல்வராஜ் ஆகிய இருவரும் அந்தப் பணிகளை செய்து முடித்து அதற்கான பில்லுக்காக நடையாய் நடந்து அலைந்திருக்கின்றனர். ஆனால் ஊராட்சி குழுத் தலைவர் திமுகவை சேர்ந்த தர்மன் என்பவர், ரமேஷும், செல்வராஜும் அதிமுகவினர் என்பதால் அவர்களுக்கு பில்லை செட்டில் செய்யவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் கடந்தாண்டு ஒப்பந்தப் பணிகளை எடுத்து செய்து முடித்தவர்களுக்கு எல்லாம் பில் கிளியராகிவிட்டதாம். இதனால் விரக்தியடைந்த ஒப்பந்ததாரர்கள் ரமேஷும், செல்வராஜூம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு தூக்க மாத்திரைகளை விழுங்கி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் இருவரும் உடனடியாக துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்த தகவலறிந்த அதிமுகவினர், ஒப்பந்தப் பணிகளுக்கு பில் செட்டில் செய்வதில் திமுகவினருக்கு ஒரு நியாயம், அதிமுகவினருக்கு ஒரு நியாயமா என கேள்வி எழுப்பியதோடு ஊராட்சி குழுத் தலைவர் தர்மன் ராஜேந்திரனை கண்டித்து சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர். அந்த நேரம் பார்த்து அமைச்சர் கே.என். நேரு சேலத்திலிருந்து துறையூர் வழியாக திருச்சி சென்றுக்கொண்டிருந்தார். உடனே அமைச்சர் நேரு காரை பார்த்ததும் திபுதிபுவென ஓடி காரை மறித்து நடந்தவற்றை சொல்லி முறையிட்டனர்.
அமைச்சர் நேரு தனக்கே உரிய பாணியில் அதிமுகவினரை டீல் செய்ததில் அவர்கள் கூலாகி காருக்கு வழிவிட்டனர். இதனிடையே அதிமுகவினர் ஆவேசமாக காரை மறித்த நிலையில், நடவடிக்கை எடுப்பதாக நேரு கூறியதில் அவர்கள் அப்படியே ஆஃப் ஆகிவிட்டனர்.












Click it and Unblock the Notifications