தமிழகத்தில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பது உறுதி- அமைச்சர் அன்பில் மகேஷ்
திருச்சி: தமிழகத்தில் செப்டம்பர் 1ஆம் தேதி 9, 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது உறுதி என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருச்சியில் இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில், செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவது உறுதி. 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அரசு உறுதியாக உள்ளது.
பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. வகுப்புகளை பாதுகாப்பாக நடத்துவது குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முதல்வரின் ஆலோசனைபடி வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் திறக்கப்படும் என்றார் அன்பில் மகேஷ்.

முதல்வர் ஸ்டாலின்
தமிழகத்தில் ஊரடங்கானது வரும் 23 ஆம் தேதி வரை முடிவடைய உள்ள நிலையில் இன்றைய தினம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள் திறப்பு, தியேட்டர்கள் திறப்பு குறித்து இன்று மாலை அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என தெரிகிறது.

கொரோனா பரவல்
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா பரவலை அடுத்து பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இரண்டாவது அலைக்கு முன்பு 11,12 ஆகிய வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் இரண்டாவது அலை தீவிரமடைந்த பிறகு அவர்களுக்கும் பள்ளிகள் மூடப்பட்டன.

பள்ளி திறக்கப்படாததால் ஆன்லைன் வகுப்பு
ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாமல் ஆன்லைன் வகுப்பிலேயே மன உளைச்சலில் இருந்தனர். ஒவ்வொரு முறையும் ஊரடங்கு நீட்டிப்பின் போது பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிப்புகள் வெளியாகுமா என பெற்றோர்களும் குழந்தைகளும் ஆவலாக இருந்தனர். ஆனால் பள்ளிகள் திறப்பு குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படாமல் தடை தொடரும் என அறிவிக்கப்பட்டது.

நேரடி வகுப்புகள்
இந்த நிலையில் நாடு முழுவதும் அனைத்து வகை வகுப்புகளுக்கும் குறிப்பாக தொடக்க பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை நடத்துமாறு இந்திய மருத்துவ கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது. இதனால் தமிழகத்தில் 1ஆம் தேதி முதல் 9, 10 , 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க தமிழக அரசு உத்தேசிப்பதாக தெரிவித்திருந்தது. இதையடுத்து பள்ளிகள் திறக்கப்பட்டால் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை கடந்த புதன்கிழமை சுகாதாரத் துறை வெளியிட்டது.

ஆசிரியர்களுக்கு சானிடைசர்கள்
அதில் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு சானிடைசர்கள் வழங்கப்பட வேண்டும். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஒரு குழு அமைத்து அல்லது சுகாதாரத் துறை பணியாளர்களின் உதவியுடன் கண்காணிக்க வேண்டும். அறிகுறியுடன் கூடிய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை பள்ளி வளாகத்திலேயே அனுமதிக்கக் கூடாது. நோய் எதிர்ப்பு சக்தி தரக் கூடிய விட்டமின் மாத்திரைகளை வழங்க வேண்டும்.

ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள்
பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் என அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். 50 சதவீத மாணவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். ஒவ்வொரு அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் வழிகாட்டும் நெறிமுறைகளை பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க சுகாதார ஆய்வாளர் அல்லது சுகாதார கண்காணிப்பாளர் நியமிக்கப்படுவர்.

சுகாதாரம்
பள்ளி வளாகத்தை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டியது பள்ளி நிர்வாகத்தின் பொறுப்பாகும். கை கழுவும் வசதிகள் போதுமான வகையில் செய்திருக்க வேண்டும். வகுப்பறையில் உள்ள மேஜைகள், பொருட்கள், பள்ளி கழிப்பறைகள், நூலகங்கள் ஆகியவை முறையாக சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மாணவர்கள், ஆசிரியர்கள் இடையே போதுமான இடைவெளி இருக்க வேண்டும். குறைந்தது 6 அடி தூரமாவது இருக்க வேண்டும்.

50 சதவீதம் மாணவர்கள்
ஒரே நேரத்தில் 50 சதவீதம் மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி என்பதால் சுழற்சி அடிப்படையில் பாடம் எடுக்கும் விதமாக கால அட்டவணையை தயாரிக்க அறிவுறுத்தப்படுகிறது. இரு ஷிப்ட்களாகவும் மாணவர்களுக்கு பாடம் எடுக்கலாம். வகுப்பறை சிறியதாக இருந்தால் கம்ப்யூட்டர் அறை, நூலகம், லேப் உள்ளிட்ட இடங்களில் மாணவர்களை அமர வைத்து பாடம் நடத்தலாம் என அந்த வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications