உதவி கேட்டு வந்த அழைப்பு... வீடு தேடிச் சென்று உதவிய அன்பில் மகேஷ் எம்.எல்.ஏ... நெகிழ்ந்த தம்பதி
திருச்சி: திருச்சியில் லாக்டவுன் காரணமாக வருவாயின்றி தவித்த வயதான தம்பதி உதவி கேட்டு அழைத்ததை அடுத்து, அவர்களது இல்லம் தேடிச்சென்று நிவாரணப் பொருட்கள் வழங்கியுள்ளார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ.
திருச்சி பாலக்கரை சுண்ணாம்புகாரத்தெருவில் வசித்து வரும் ராஜேந்திரன் என்பவர் லாக்டவுன் கட்டுப்பாடுகள் காரணமாக பணிக்கு செல்ல முடியாமல் வருவாயின்றி சிரமப்பட்டு வந்துள்ளார். சமைப்பதற்கு தேவையான அரிசி, மளிகைப் பொருட்கள் கூட வாங்க முடியாத நிலையில் தவித்த அவர், இது தொடர்பாக தகவல் தெரிவித்து உதவி கேட்பதற்காக திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளரும், திருவெறும்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான அன்பில் மகேஷ் பொய்யாமொழியை அலைபேசி மூலம் தொடர்புகொண்டுள்ளார்.

மேலும், தழுதழுத்த குரலில் ராஜேந்திரன் தனது குடும்ப நிலை குறித்து விவரித்ததை அடுத்து அவரது முகவரியை கேட்டுப்பெற்ற அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அடுத்த சில மணி நேரங்களில் தன்னிடம் உதவி கேட்டவர் இல்லத்தை தேடிச்சென்று அவர்களை நெகிழ வைத்துவிட்டார். அரிசி, மளிகைப் பொருட்கள், உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் கொடுத்ததோடு சொந்த நிதியில் இருந்து வயதான தம்பதிக்கு நிதியுதவியும் வழங்கினார்.

அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் கனிவும், அன்பும் ராஜேந்திரன் மற்றும் அவரது மனைவியை நெகிழ வைத்துவிட்டது. இதனிடையே திருச்சி பாலக்கரையில் உள்ள சுண்ணாம்புகாரத் தெரு என்பது குறுகிய பாதை கொண்ட ஒரு பகுதியாகும். இங்கு காரில் செல்ல முடியாது என்றபோதும் பரவாயில்லை நான் நடந்து வருகிறேன் எனக் கூறி அன்பில் மகேஷ் நடந்தே சென்றுள்ளார். மேலும், கொரோனா பரவல் காரணமாக தன்னுடன் பெரியளவில் கூட்டம் வர வேண்டாம் எனக் கூறிவிட்டு 3 பேர்களுடன் மட்டும் சென்றார்.












Click it and Unblock the Notifications