சட்டையை கழற்றி.. அரை நிர்வாணத்துடன் வாக்களித்த அய்யாக்கண்ணு.. ஷாக்கான போலீசார்.. பரபரத்த திருச்சி!
திருச்சி: தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு திருச்சியில் சட்டையை கழற்றி அரை நிர்வாணத்துடன் வாக்களித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அரவக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலையில் மீண்டும் தேர்தல் நடத்த நாங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்று அய்யாக்கண்ணு கூறினார்.
வாக்குப்பதிவு தீவிரம்
தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு வேமாக நடந்து வருகிறது. சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் தங்கள் ஜனநாயக கடமையை செய்து வருகின்றனர். திருச்சி மாவட்டத்திலும் வாக்குப்பதிவு விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. இந்த நிலையில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு திருச்சி மேற்கு தொகுதியில் உரையூர் தனலட்சுமி சீனிவாசன் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்தார்.
சட்டையை சுழற்றிய அய்யாக்கண்ணு
பள்ளியின் முன்பு திடீரென தனது சட்டையை கழற்றிய அய்யாக்கண்ணு அரை நிர்வாண கோலத்தில் வாக்குச்சாவடிக்குள் வந்ததால் அங்கு இருந்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அய்யாக்கண்ணு ஏதும் போராட்டம் நடத்தி விடக்கூடாது என்று கூறி எஸ்.ஐ. ஒருவர் வாக்களிக்கும் அறை அவர் உடன் சென்றார். வாக்களித்த பின் நிருபர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு கூறியதாவது:-
கோதாவரி-காவிரி இணைப்பு நிதி எங்கே?
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவோம் என கூறுகிறார்கள், கோதாவரி-காவிரி இணைப்பு என்று சொன்னார்கள். ஆனால் இந்த திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. விவசாயிகளின் வேஷ்டி, சட்டையை அரசு பிடுங்கிக் கொண்டது. ஏற்கனவே சட்டை இல்லாமல் வேட்புமனு தாக்கல் செய்ய அரவக்குறிச்சி, திருவண்ணாமலைக்கு சென்றேன். ஆனால் சட்டை அணியாமல் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாது என்று கூறினார்கள்.
அரவக்குறிச்சியில் மறு தேர்தல்
இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையரை போய் பார்த்தோம். அதற்கு அவர் காந்தியே சட்டை இல்லாமல் தான் இருந்தார். இதில் என்ன இருக்கிறது என்றார். வேட்பு மனு தாக்கல் செய்ய போகும்போது சட்டை போட வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் ஓட்டு போட சட்டை இல்லாமல் போங்கள் என்று கூறுகிறார்கள். அரவக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலையில் மீண்டும் தேர்தல் நடத்த நாங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்று அய்யாக்கண்ணு கூறினார்.