ரயில்வேயில் தமிழர்களுக்கு வேலை வழங்குக... தமிழ்த்தேசிய பேரியக்கம் போராட்டம் அறிவிப்பு
திருச்சி: ரயில்வேயில் தமிழர்களுக்கு வேலை வழங்கக் கோரி, திருச்சி பொன்மலை பணிமனை முன்பு வருகிற 3-ந் தேதி மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்த்தேசிய பேரியக்க தலைவர் மணியரசன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, திருச்சியில் செய்தியாளர்களிடம் மணியரசன் பேசியதாவது: திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் பழகுநர் பணிக்கு நடைபெற்ற நேர்காணலில் தேர்வு செய்யப்பட்டு, பணியமர்த்தப்பட்ட 300 பேரில் ஒருவர் கூட தமிழகத்தைச் சேர்ந்தவர் இல்லை. இதேபோல், சென்னை பெரம்பூரில் உள்ள கேரேஜ் பணிமனைக்கு பழகுநர் பணிக்கு நடைபெற்ற நேர்காணலில் தேர்வு செய்யப்பட்டவர்களில் 500 பேர் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
கோவை எஸ் அண்ட் சி (சிக்னல் அண்ட் கம்யூனிகேஷன்ஸ்) பணிமனையில் 2 ஆயிரம் பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களில், 1,800 பேர் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். தமிழகத்தில் உள்ள ரயில்வே பணியிடங்களில் 90 சதவீதம் வெளிமாநிலத்தவர்களே பணிபுரிகின்றனர்.

புறக்கணிப்பு
தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் தொழிற்சாலைகள், ரெயில்வேதுறை, தபால்துறை, வருமானவரித்துறை, விமானநிலையங்கள் உள்பட 18 துறைகளில் தமிழக இளைஞர்களை புறக்கணித்து வடமாநிலங்கள் மற்றும் இதர வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களை 100-க்கு 90 சதவீதம் அளவுக்கு வேலைக்கு சேர்க்கிறார்கள். சமீபத்தில் திருச்சி பொன்மலை ரெயில்வேயில் பழகுனர் பணிக்கு நேர்காணலுக்கு அழைக்கப்பட்ட 1,765 பேரில் 100 பேர் மட்டுமே தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். 1,600 பேர் வடமாநிலங்களையும், இதர வெளிமாநிலங்களையும் சேர்ந்தவர்கள்.

90 லட்சம் இளைஞர்கள்
இதுமட்டுமல்லாது தமிழ் தெரியாவர்கள் வேலையில் சேர்ந்து 2 ஆண்டுகளுக்குள் தமிழ் கற்கலாம் என அவகாசமும் அளிக்கிறது. இந்தச் சூழலில் தமிழக வேலைவாய்ப்புகள் முழுமையாக வட மாநிலத்தவர்களும், வெளி மாநிலத்தவர்களுமே சென்றுவிடும். இதனால், தமிழர்கள் அவர்களது சொந்த மண்ணிலேயே வேலைவாய்ப்பு இல்லாமல் வெளிநாடுகளுக்கு சென்று அடிமையாக வாழும் நிலை உருவாகும். ஏற்கெனவே 90 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்புக்கு பதிவு செய்து காத்திருக்கின்றனர்.

மறியல் போராட்டம்
தமிழ்நாடு முழுவதும் உள்ள இந்திய அரசு நிறுவனங்கள், அலுவலகங்கள் அனைத்திலும் 90 சதவீதம் வேலை தமிழ்நாட்டு மக்களுக்கே வழங்க வேண்டும். அவற்றில் 10 சதவீதத்துக்கு மேல் உள்ள வெளிமாநிலத்தவரை வெளியேற்ற வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 3-ந் தேதி காலை 11 மணிக்கு தமிழ்த்தேசிய பேரியக்க தலைமை செயற்குழு உறுப்பினர் அருணபாரதி தலைமையில் திருச்சி பொன்மலை பணிமனை முன்பு மறியல் போராட்டம் நடத்தப்படும்.

நடவடிக்கை தேவை
பொன்பரப்பி சம்பவத்தில் வன்முறைக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது, பொருளாளர் ஆனந்தன், பொதுக்குழு உறுப்பினர் கவித்துவன், மாநகர செயலாளர் இலக்குவன் ஆகியோர் உடன் இருந்தனர்.












Click it and Unblock the Notifications