திருச்சியில் இஸ்லாமியர்களின் அடக்கஸ்தலம் இடித்து ஆக்கிரமிப்பு! எஸ்.டி.பி.ஐ. கடும் கண்டனம்!
திருச்சி: திருச்சியில் இஸ்லாமியர்களின் அடக்கஸ்தலத்தை சமூக விரோதிகள் இடித்து ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறியுள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சி கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
தர்காக்களை இடித்து சேதப்படுத்தி பொது அமைதியை சீர்குலைத்தவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ. மாநில செயலாளர் அபுபக்கர் சித்திக் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

இஸ்லாமியர்களின் அடக்கஸ்தலம்
திருச்சி மாநகரின் மையப் பகுதியான தென்னூரில் உள்ள மாதுளங்கொல்லை என்கிற அனார் பாக் தர்கா மற்றும் இஸ்லாமியர்களின் அடக்கஸ்தலத்தை ஆக்கிரமிப்பு செய்யும் விதமாக, அங்குள்ள பழமையான தர்காக்கள் மற்றும் கபரஸ்தான்களை இன்று (ஜன.01) அதிகாலை இடித்து சில சமூக விரோதிகள் தரைமட்டமாக்கியுள்ளனர். ஆக்கிரமிப்பாளர்களின் சமூக விரோத நடவடிக்கைக்கு காவல்துறையை சேர்ந்தவர்களும் துணைபோயுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த செயலை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

2.14 ஏக்கர்
ஹஜரத் சையத் குத்புதீன் ஷா, ஹஜரத் ஷா பாபா சையத் குத்புதீன் கிப்லா காதிரி மற்றும் ஹஜரத் ஷா பாபா சையத் கமருதீன் கிப்லா காதிரி உள்ளிட்ட மகான்கள் அடக்கமாகியிருக்கும் அனார் பாக் தர்கா பகுதி மற்றும் அதனையொட்டி அமைந்துள்ள இஸ்லாமியர்களின் அடக்கஸ்தல பகுதி ஆகிய 2.14 ஏக்கர் பகுதியும் வக்புக்கு சொந்தமான பகுதியாகும்.

அதிகாலை 4 மணி
இந்நிலையில், திருச்சியின் மிகமுக்கியமான மையப்பகுதியில் அமைந்துள்ள இப்பகுதியை ஆக்கிரமிக்கும் முயற்சிகள் தொடர்ச்சியாக நடந்துவருகின்றன. இஸ்லாமிய கூட்டமைப்பினர் இந்த முயற்சியை அவ்வப்போது தடுத்துவரும் வேளையில், இன்று அதிகாலை 4 மணி அளவில் புல்டோசர் உள்ளிட்ட வாகனங்களுடன் மீண்டும் ஆக்கிரமிக்கும் வேளைகளில் காவல்துறை உதவியுடன் சிலர் ஈடுபட்டுள்ளனர்.

கடும் நடவடிக்கை
ஆகவே, இஸ்லாமியர்களின் பயன்பாட்டில் உள்ள வக்போர்டுக்கு சொந்தமான பழமைவாய்ந்த அனார் பாக் தர்கா மற்றும் கபர்ஸ்தான் பகுதியை ஆக்கிரமிக்க முயற்சிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்வதோடு, மகான்களின் தர்காக்களை இடித்து சேதப்படுத்தி பொது அமைதியை சீர்குலைத்தவர்கள் மற்றும் துணைபோன காவல் அதிகாரிகள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications