அழுத்தம் தரும் மத்திய அரசு.. நிறுத்தி வைக்கப்படும் பள்ளிக் கல்வித் துறை நிதி.. பின்னணி அரசியல்
திருச்சி: தேசிய கல்விக் கொள்கையின்கீழ் வந்தால் மட்டும்தான் பள்ளிக் கல்வித் துறைக்கான நிதி உடனடியாக கிடைக்கும் என்று தெரிவிக்கின்றனர். புதிய கல்விக் கொள்கையில் இணைய மத்திய அரசு அழுத்தம் தருவது நிச்சயம் உண்மைதான் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
மேலும், அனைவருக்கும் கல்வி என்பதை மாநில அரசான நாங்களும் சொல்கிறோம், மத்திய அரசான நீங்களும் சொல்கிறீர்கள், இந்த சூழலில் நிதியை வழங்காமல் இருப்பது எந்த விதத்தில் நியாயம் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் தந்தையும், முன்னாள் அமைச்சருமான அன்பில் பொய்யாமொழியின் 25 ஆம் ஆண்டு நினைவு நாள் திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் அனுசரிக்கப்பட்டது. தந்தையின் திருவுருவப் படத்துக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, திமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதைத் தொடர்ந்து, அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பள்ளிக் கல்வித் துறைக்கு மட்டும் கடந்த ஜூன் மாதம் வரை 573 கோடி ரூபாய் மத்திய அரசிடம் இருந்து வந்திருக்க வேண்டும். ஆனால், தற்போது வரை வராமல் உள்ளது. இதுகுறித்து திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மத்திய கல்வித் துறை அமைச்சரை சந்தித்து தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
மத்திய அரசு எப்போதும் கல்விக்கான நிதியை மட்டும் எப்போதும் நிறுத்திவிடக் கூடாது. இது பல லட்சம் மாணவர்களின் கல்வி சார்ந்த விஷயம் என்பதால் இதில் மத்திய அரசு அரசியல் செய்யக் கூடாது எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனாலும், தற்போது வரை எவ்வித நடவடிக்கைகளும் மத்திய அரசு சார்பில் எடுக்கப்படவில்லை. இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை சார்பில் பலமுறை மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. ஆனால், அதற்கும் இதுவரை அரசிடம் இருந்து எந்த பதிலும் வழங்கப்படவில்லை.
பள்ளிக் கல்வித் துறைக்கு கடந்த ஜூன் மாதம் வரை வரவேண்டிய நிதி குறித்து தொடர்ந்து நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் வலியுறுத்தி வருகின்றனர். பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்து நீண்ட நாள்களாகியுள்ள நிலையில், பள்ளிக் கல்வித் துறைக்கு நிதி வராமல் இருப்பது குறித்து வெளிநாடு செல்வதற்கு முன்பும் கூட மத்திய அரசிடம் முதல்வர் நேற்று வலியுறுத்தினார்.
அதேபோல, நடப்பு ஆண்டுக்கான ரூ. 573 கோடி மட்டுமல்லாமல் கடந்த ஆண்டு வரவேண்டிய ரூ. 249 கோடியையும் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. தேசிய கல்விக் கொள்கையின்கீழ் வந்தால் மட்டும்தான் இந்த நிதி உடனடியாக கிடைக்கும் என்று தெரிவிக்கின்றனர். புதிய கல்விக் கொள்கையில் இணைய மத்திய அரசு அழுத்தம் தருவது நிச்சயம் உண்மைதான்.
தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்ற முறையில் அதனை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதை மத்திய அரசு மறந்து விடுகிறது. கொள்கை என்பது விவாதம் சார்ந்தது, அதற்காக நிதியை நிறுத்துவது நியாயமல்ல. மூன்று ஆண்டுகளாக கடும் நிதி நெருக்கடியில் தமிழக அரசு சமாளித்துக் கொண்டிருக்கிறது. அதேபோலத்தான் கல்விக்கான நிதிச் சுமையும் சமாளிக்கப் போகிறோம்.
ஜிஎஸ்டியில் இருந்து அனைத்து தொகையும் மத்திய அரசு எடுத்துக் கொள்கிறது. ஆனால், மத்திய அரசு நிதி ஒதுக்குவதில்லை. கடும் நிதிச் சுமைகள் ஏற்பட்டாலும் மாணவர்கள், ஆசிரியர்களுக்குத் தேவையான அனைத்தையும் முதல்வர் செய்வார் என்றார்.












Click it and Unblock the Notifications