ரோந்து பணியின்போது தலைமை காவலருக்கு நேர்ந்த சோகம்: ரூ.25 லட்சம் நிதியுதவி அறிவித்த முதல்வர் ஸ்டாலின்
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் ரோந்து பணியின்போது, நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த, தலைமைக் காவலர் ஸ்ரீதர் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "திருச்சி மாநகர், அரியமங்கலம் போக்குவரத்து ஒழுங்குப் பிரிவில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்த ஸ்ரீதர் (45) கடந்த 30-7-2023 அன்று அரிஸ்டோ இரயில்வே மேம்பாலத்தில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக வந்த கார் ஒன்று மோதியதில் காயமுற்று அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் தலைமைக் காவலர் ஸ்ரீதர் உயிரிழந்திருப்பது காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஒரு பேரிழப்பாகும்.
தலைமைக் காவலர் ஸ்ரீதர் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு இருபத்தைந்து லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ரோந்து பணியின் போது ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்த தலைமைக் காவலரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் அறிவித்துள்ளார். pic.twitter.com/9hsjM7Oqrf
— CMOTamilNadu (@CMOTamilnadu) August 26, 2023












Click it and Unblock the Notifications