பசங்கதான் அப்படின்னா.. பெண் பிள்ளைகளுக்குமா நெஞ்சில் ஈரம் இல்லை.. கோவை தம்பதிக்கு நேர்ந்த கொடுமை
திருச்சி: 2 பெண் குழந்தைகளை பெற்றும் என்ன பண்ண.. மனதில் ஈரத்தோடு வளர்க்காமல் விட்டதாலோ என்னவோ, வயதான காலத்தில், கணவனும் மனைவியும், காவிரியில் விழுந்து உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
திருச்சி-ஸ்ரீரங்கத்தில்தான் இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை ரோட்டில் உள்ள அம்மா மண்டபம் படித்துறை பக்தர்கள் நீராட தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டு, வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது உங்களுக்கே தெரியும்.
தற்போது காவிரி ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் செல்கிறது.
திமுகவுடனான கூட்டணிக்கு வேட்டு வைக்கத்தான் வந்தாரா தினேஷ் குண்டுராவ்? கொந்தளிக்கும் காங்.
நகைகள்
இந்த நிலையில், நேற்று முன்தினம் இங்கு வயதான தம்பதி ஒன்று வந்துள்ளனர். அவர்கள் படித்துறையில் நின்றவாறு காவிரித் தாயை வணங்கியுள்ளனர். பின்னர், மூதாட்டி, தான் அணிந்திருந்த தாலிச்சங்கிலி மற்றும் தங்க கம்மல், வளையல்கள் உள்ளிட்ட நகைகளை கழற்றி அங்கிருந்த உண்டியலில் போட்டுள்ளார். இவர்கள் செயல் வினோதமாக இருக்கிறதே என்று அங்கேயிருந்த சிலர் கவனித்துள்ளனர்.
காவிரியில் இறங்கினர்
ஆனாலும், ஒருவேளை இது அவர்களின் வேண்டுதலாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டு சும்மா இருந்தனர். பின்னர் இருவரும், அம்மா மண்டபம் படித்துறையில் இறங்கி கைகோர்த்தவாறு காவிரி ஆற்றில் இறங்கியுள்ளனர். அப்போதும், இருவரும் காவிரியில் குளிக்க செல்வதாக அங்கிருந்தவர்கள் நினைத்தனர்.
ஆழமான பகுதி
பிறகுதான் அந்த விபரீதத்தை அங்கே இருந்தவர்கள் கவனித்தனர். ஆற்றின் ஆழமான பகுதிக்கு செல்ல முடியாமல் உள்ளே போன இருவரும் நீரில் மூழ்குவதும், எழுவதுமாக இருந்துள்ளனர். ரொம்ப நேரமாக இப்படியே அவர்கள் செய்ததால், இருவரும் தற்கொலை எண்ணத்துடன்தான் காவிரியில் குளிக்க சென்றிருப்பார்கள் என்பதை அங்கேயிருந்தவர்கள் யூகித்துக் கொண்டனர்.
ஆறுதல் வார்த்தை
இதைப்பார்த்த மண்டபத்தில் நின்றிருந்த ஊழியர்கள் சிலர், காவிரி ஆற்றில் இறங்கி இருவரையும் கைத்தாங்கலாக வெளியே அழைத்து வந்தனர். முதலில் வெளியே வரமறுத்து முரண்டு பிடித்தனர் அந்த முதியவர்கள். அவர்களிடம் ஆறுதலாக சில வார்த்தைகளை கூறி வெளியே அழைத்து வந்தனர் பிற பக்தர்கள். உடனடியாக தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு ஸ்ரீரங்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தயாளன் மற்றும் போலீசார் விரைந்து வந்து தம்பதியினரிடம் விசாரணை நடத்தினர்.
கவனிக்காத 2 மகள்கள்
விசாரணையில் இருவரும், கோவையை அடுத்த துடியலூரை சேர்ந்த வெங்கடேசன் (வயது 81), மனைவி இந்திராணி (72) என்பது தெரிந்தது. தற்கொலை முடிவை ஏன் எடுத்தீர்கள்? என போலீசார் கேட்டபோது வயதான தம்பதியினர் தழுதழுத்த குரலில் பதில் தெரிவித்தனர். எங்களுக்கு 2 மகள்கள். ஆண் வாரிசு கிடையாது. அவர்களை நல்லபடியாக வளர்த்து படிக்கவைத்தோம். நல்ல இடத்தில் இருவருக்கும் திருமணமும் செய்துகொடுத்தோம். தனியாக வசித்த எங்களுக்கு வயதாகி விட்டதால், கோவையில் உள்ள 2-வது மகள் வீட்டில் வசித்தோம். அங்கு மகளுடன் சிறு, சிறு மனக்கசப்பு ஏற்பட்டது. அது எங்களுக்கு மனதில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.
காப்பாற்றிவிட்டார்கள்
எனவே, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை இறுதியாக தரிசித்து விட்டு வாழ்க்கையை முடித்து கொள்ளலாம் என பஸ்சில் ஏறி திருச்சிக்கு வந்தோம். ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை தரிசனம் செய்து விட்டு, அம்மா மண்டபம் படித்துறைக்கு வந்து காவிரி ஆற்றில் மூழ்கி உயிரை மாய்த்துக்கொள்ள ஆற்றில் இறங்கினோம். ஆனால், எங்களை மீட்டு விட்டார்கள். இவ்வாறு அந்த தம்பதியினர் கூறினர்.
பெற்றோரை பாருங்கள்
மகளுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் வயதான தம்பதி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அம்மா மண்டபத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. போலீசார் வயதான தம்பதியினரை மீட்டு, திருச்சியில் உள்ள ஆதரவற்றோர் கருணை இல்லமான கங்காரு கருணை இல்லத்தில் ஒப்படைத்தனர். மேலும் கோவையில் உள்ள மகளுக்கும் போலீசார் தகவல் தெரிவித்து இருக்கிறார்கள். ஆண் குழந்தைகள் கைவிட்டாலும், பெண் பிள்ளைகள் பெற்றோரை கைவிட மாட்டார்கள் என்று பரவலாக உள்ள கருத்தை தகர்ப்பதை போல உள்ளது இந்த சம்பவம். வயதான பெற்றோரை கவனிக்காமல் கடவுளை கும்பிட்டும் பலனில்லை என்பதை இந்த தலைமுறையினர் என்று உணர்வார்கள்?