திருச்சியில் தேடி தேடி உதவும் அதிமுக.. களத்தில் கலக்கும் அதிமுக மாவட்ட செயலாளர் ரத்தினவேல்!
திருச்சி: திருச்சி புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் துவாக்குடி மற்றும் துறையூர் அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்க மூன்றாவது கட்டமாக ரூ 85 ஆயிரத்தை அதிமுக மாவட்ட செயலாளர் ரத்தினவேல் வழங்கினார்.
தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆலோசனையின்படியும் திருச்சி புறநகர் மாவட்ட கழக செயலாளர் மற்றும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் டி. ரத்தினவேல் தனது சொந்த நிதியில் இருந்து பல்வேறு நிவாரண பணிகளை செய்து வருகிறார்.

தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுக்கும் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு நிவாரணம் பொருள்களை வழங்கி வருகிறார். அதுமட்டுமல்லாமல் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதியில் உள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை தொடர்ந்து வழங்க கோரியும் அறிவுறுத்தி வருகிறார்.
இது தொடர்பாக அந்தந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுரை வழங்கி வருவதோடு திருச்சி மாவட்டத்தில் தினமும் ஏதாவது ஒரு பகுதிக்கு சென்று நிவாரணம் பொருள்களை மாவட்ட செயலாளர் டி ரத்தினவேல் வழங்கி வருகிறார். ஏற்கனவே புறநகர் பகுதியில் உள்ள துவாக்குடி மற்றும் துறையூர் ஆகிய அம்மா உணவங்களில் சாப்பிட வரும் பொதுமக்களுக்கு மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்க தனது சொந்த நிதியில் இருந்து இரண்டு கட்டமாக நிதியுதவி வழங்கினார்.

இந்த நிலையில் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட துவாக்குடி, மற்றும் துறையூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட துறையூர் நகரில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் விலையில்லா உணவு வழங்க மூன்றாம் கட்ட நிதியாக ரூபாய் 85000/- க்கான காசோலையை ரத்தினவேல் வழங்கினார்.
இதன் மூலம் வரும் 31 ஆம் தேதி வரை மூன்று வேளைக்கு பொதுமக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படும் என்று டி. ரத்தினவேல் தெரிவித்தார். பின்னர் அம்மா உணவகத்தில் வருகை பதிவு முதல் உணவு பாதுகாப்பு அறை வரை ஆய்வு மேற்கொண்டு ரத்தினவேல், அங்கு சாப்பிட வந்த பொது மக்களிடம் நிறை குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர் அம்மா உணவகத்தில் பொதுமக்களோடு மாவட்ட செயலாளர் ரத்தினவேல் உணவுகளை சாப்பிட்டார். இதேபோல் திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஏழை எளியோர் 200 பேருக்கு இலவச அரிசி மற்றும் காய்கறிகள் அடங்கிய பைகளை ரத்தினவேல் வழங்கினார். பின்னர் வேங்கூர் பகுதியில் மாற்றுத் திறனாளிகள் 24 பேருக்கு அரிசி, காய்கறிகள் மற்றும் கோதுமை உள்ளிட்ட பொருள்களையும் வழங்கினார்.












Click it and Unblock the Notifications