நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஊரில் நத்தை வேகத்தில் நடக்கும் பணிகள்! கண்டும் காணாமல் அதிகாரிகள்!
திருச்சி: நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவின் ஊரான திருச்சியில் நடைபெற்று வரும் மாநகராட்சி பணிகள் நத்தை வேகத்தில் நடந்து வருகின்றன.
குறிப்பாக திருச்சியின் நுழைவு வாயிலான கருமண்டபம் பகுதியிலிருந்து அரிஸ்டோ ரவுண்டானா பகுதிக்கு செல்வதற்குள் வாகன ஓட்டிகளுக்கு போதும் போதும் என்றாகி விடுகிறது. இதற்கு காரணம் ஒரு பக்கம் சாலை அமைக்கும் பணிகள், மற்றொரு பக்கம் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடந்து வருவதால் அப்பகுதியே புகைமண்டலமாக காட்சி அளிக்கிறது.

காலை மாலை பீக் ஹவர்களில் சொல்லவே தேவையில்லை. ஒவ்வொரு வாகனமும் திருச்சிக்குள் நுழைவதற்கும், திருச்சியிலிருந்து வெளியே செல்வதற்கும் குறைந்தது 45 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் ஆகிவிடுகிறது. ஒப்பந்தப் பணிகளை மேற்பார்வையிட்டு தொடர்ந்து கண்காணித்து துரிதப்படுத்த வேண்டிய உதவி செயற்பொறியாளர்களோ, நிர்வாக பொறியாளர்களோ கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர்.
இதற்கு காரணம் நாம் சொன்னால் ஒப்பந்ததாரர்கள் கேட்கவா போகிறார்கள் என்ற ஐயம் தான். கருமண்டபம் பகுதியில் ஒரு பக்கம் மட்டும் சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதுவும் குறுகிய அளவில் அமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக மாநகரப் பகுதிகளில் ஒப்பந்தப் பணிகள் எடுப்போர் இரவு பகலாக அதிக ஆட்களை பணிக்கு அமர்ந்தி வேலையை விரைந்து முடிப்பது தான் வழக்கம். அப்போது தான் போக்குவரத்துக்கு சிரமம் இருக்காது.
ஆனால் திருச்சி மாநகரில் அதற்கு தலைகீழாக நடந்து வருகிறது. இது குறித்து அதிகாரிகளும், அமைச்சர் கே.என்.நேருவும் கவனத்தில் கொண்டு பணிகளை விரைந்து முடித்து போக்குவரத்தை சீர் செய்வதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்பது திருச்சி கருமண்டபம் பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.












Click it and Unblock the Notifications