தேர்தல் நடத்தும் அலுவலருடன் அமைச்சர் ரகசிய சந்திப்பு... திமுக வேட்பாளர் இனிகோ பரபரப்பு புகார்..!
திருச்சி: திருச்சி கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ரகசியமாக சந்தித்து பேசியதாக திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் பரபரப்பு புகார் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினியை நேரில் சந்தித்து புகார் மனு அளித்த இனிகோ இருதயராஜ், கடந்த 26-ம் தேதி தேர்தல் நடத்தும் அலுவலருடன் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ரகசிய சந்திப்பு நடத்தியதாக தெரிவித்துள்ளார்.
தேர்தல் நடத்தும் அலுவலர் அறைக்குள் தபால் வாக்குகள் உள்ள நிலையில் இந்தச் சந்திப்பை எப்படி நடத்தலாம் என அவர் வினவியுள்ளார். அரைமணி நேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது அலுவலக ஊழியர்கள் யாரையும் அந்த அறைக்குள் அனுமதிக்க மறுத்ததன் பின்னணி என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக வேட்பாளரின் கிடுக்கிப்பிடி கேள்விகளால் அதற்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு மாவட்ட நிர்வாகத்திற்கு ஏற்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பு பலத்த சந்தேகத்தை எழுப்புவதாக கூறியுள்ள திருச்சி கிழக்குத் தொகுதி திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ், இது தொடர்பாக தேர்தல் ஆணையம் முறையாக விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
என்ட்ரி போடாமல் லாரி உள்ளே வந்தது எப்படி... பாதுகாப்பு போலீஸாரிடம் இனிகோ இருதயராஜ் கிடுக்கிப்பிடி..!
முன்னதாக மாவட்ட ஆட்சியர் தனது புகார் மனு மீது நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாக கூறியிருக்கிறார். வாக்கு எண்ணிக்கை, உள்ளிட்ட தேர்தல் தொடர்புடைய எந்த அறிவிப்பாக இருந்தாலும் அனைத்து வேட்பாளர்களையும் அழைத்து பேச வேண்டியது தான் தேர்தல் நடத்தும் அதிகாரியின் கடமை.
அப்படியிருக்கும் போது இந்தச் சந்திப்பு எதற்காக நடைபெற்றது என்ற கேள்வியை இயல்பாகவே எழுப்புகிறது.