நான் ராசிக்காரன் இல்லை! எனக்கு ராசி மீதெல்லாம் நம்பிக்கை கிடையாது! உதயநிதி ஸ்டாலின் பளிச்!
திருச்சி: தனக்கு ராசி மீது நம்பிக்கை கிடையாது என்றும் தாம் ராசிக்காரன் இல்லை எனவும் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், தனது பொதுக்கூட்டத்தில் மூத்த அமைச்சர்களான பொன்முடியும், கே.என்.நேருவும் பங்கேற்றது தனக்கு மிகுந்த பெருமையை தருவதாக கூறினார்.

திமுக பொதுக்கூட்டம்
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் ஏற்பாட்டில் திமுக ஐம்பெரும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திமுகவின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கியும் அகில இந்திய அளவிலான கபடி போட்டியை தொடங்கி வைத்தும் உரையாற்றினார். முன்னதாக பேசிய கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, உதயநிதி ஸ்டாலின் ராசிக்காரர் அவர் எப்போது மணப்பாறைக்கு வந்தாலும் மழையோடு தான் வருகிறார் எனக் கூறினார்.

அமைச்சர் அன்பில் மகேஸ்
அதேபோல் அவரைத் தொடர்ந்து பேசிய அமைச்சரும் திருச்சி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, உதயநிதி ஸ்டாலின் ராசிக்காரர் அதனால் தான் அவர் வரும் போதெல்லாம் மழை பெய்வதாக தெரிவித்தார். இந்நிலையில் இதை கவனித்த உதயநிதி ஸ்டாலின், தனக்கு ராசி மீது நம்பிக்கை கிடையாது என்றும் தாம் ராசிக்காரன் இல்லை எனவும் தெரிவித்தார். மழையோடு வருகிறேனோ இல்லையோ அன்போடும், பாசத்தோடும் உங்களை காண வேண்டும் என்ற ஆவலோடு வந்திருக்கிறேன் எனத் தெரிவித்தார்.

மூத்த அமைச்சர்கள்
மேலும், மூத்த அமைச்சர்களான கே.என்.நேருவும், பொன்முடியும் தனது பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வருகை தந்திருப்பதால் இதை விட வேறு என்ன பெருமை தனக்கு கிடைக்கப் போகிறது என பெருமிதம் தெரிவித்தார். இதைக் கேட்டு உற்சாகமடைந்த அமைச்சர் பொன்முடியின் முகமெல்லாம் ஒரே பூரிப்பாக இருந்தது. அதேநேரம் அமைச்சர் நேரு எப்போதும் போல் எந்த ரியாக்ஷனையும் காட்டாமல் அமைதியாக அமர்ந்திருந்தார்.

உள் விளையாட்டரங்கம்
சட்டமன்றத் தேர்தலின் போது பிரச்சாரம் செய்ய வந்த தன்னிடம் மணப்பாறைக்கு அரசு கலை அறிவியல் கல்லூரி கேட்டு பலரும் கோரிக்கை விடுத்ததாகவும் இன்று அது நிறைவேற்றப்பட்டுள்ளதால் தெம்புடன், பெருமையுடன் மணப்பாறைக்கு தாம் வந்துள்ளதாக தெரிவித்தார் உதயநிதி ஸ்டாலின். இதனிடையே மணப்பாறையில் அடுத்த 4 ஆண்டுகளுக்குள் உள் விளையாட்டரங்கம் அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதியை அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications