கஜா: புதுக்கோட்டையில் மின்சாரம் தாக்கிய ஊழியர்.. அமைச்சர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தும் பலி
திருச்சி: கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தில் மின் இணைப்பை சரி செய்த போது மின்சாரம் தாக்கிய ஊழியரை அமைச்சர் காப்பாற்றி திருச்சி மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பலியாகிவிட்டார்.
கஜா புயல் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பலமாக காற்று வீசியது. இதனால் மின் கம்பங்கள் சாய்ந்தன. இந்த மாவட்டத்தில் புயல் மீட்பு பணிகளை அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டார்.
அப்போது புதுக்கோட்டை நகரின், கீரனூர் பகுதியில் உள்ள ஒரு கல்லூரி அருகே மின்சார டிரான்ஸ்பார்மர் மீது ஏறி நின்று சில மின்சாரத்துறை ஊழியர்கள் பழுது பார்த்துக் கொண்டிருந்தனர்.

மயக்கம்
அப்போது எதிர்பாராதவிதமாக மின் ஊழியர்கள் நாமக்கல் மாவட்டம் குமாரமங்கலத்தை சேர்ந்த முருகேசன் மற்றும் தேவனாங்குறிச்சியை சேர்ந்த மோகன் ஆகியோர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதையடுத்து டிரான்ஸ்பார்மர் மீது அப்படியே மயங்கி சாய்ந்தனர்.

திருச்சி மருத்துவமனை
சக ஊழியர்களின் உதவியுடன் மீட்கப்பட்ட அவர்கள் கீழே இறக்கப்பட்ட போது முகத்தை தட்டி கொடுத்தும் துணியால் முகத்தை துடைத்தும் விட்டு பணிவிடை செய்தார். இதையடுத்து தனது காரிலேயே அவர்களை திருச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

அஞ்சலி
பின்னர் மருத்துவமனையிலும் சென்று நலம் விசாரித்தார். இந்த நிலையில் முருகேசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலுக்கு எம்எல்ஏ பொன் சரஸ்வதி அஞ்சலி செலுத்தினார்.
|
தியாகம்
ஊழியர் பலி குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கூறுகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் நிவாரணப் பணிகளின் போது மின்சாரம் தாக்கி திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மின் ஊழியர் முருகேசன் உயிரிழந்தது அதிர்ச்சியளிக்கிறது. அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல். அவரது தியாகம் போற்றத்தக்கது! என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications