Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருச்சி: குடிநீரில் கலப்படத்தால் 3 பேர் பலி? கொந்தளித்த எதிர்க்கட்சிகள்! மாநகராட்சி மேயர் மறுப்பு!

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சி உறையூர் பகுதியில் குடிநீரில் கலப்படம் காரணமாக 3 பேர் பலியானதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை ஆகியோர் குற்றம்சாட்டியுள்ள நிலையில், திருச்சி மேயர் அன்பழகன் அதனை மறுத்துள்ளார்.

திருச்சி உறையூர் 10 வது வார்டு பகுதியில் பல இடங்களில் குடிநீரில் கலப்படம் ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றச்சாட்டை முன் வைத்தனர். இப்பகுதியில் வயிற்றுப்போக்கு வாந்தி காரணமாக 4 வயது சிறுமி உட்பட 3 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். மேலும், ஐம்பதுக்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் இருக்கின்றனர். இப்பகுதியில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் நேரில் வருகை தந்து ஆய்வு மேற்கொண்டார்.

Trichy edappadi palaniswami annamalai

திருச்சி மேயர் விளக்கம்

அப்போது அவரை முற்றுகையிட்டு அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்பது குறித்து விளக்கம் கேட்டனர். இதுகுறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி மேயர் அன்பழகன் தெரிவித்தார். அதன்பிறகு அனைவரும் கலைந்து சென்றனர்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், "திருச்சி உறையூர் பகுதியில் பொதுமக்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்ட காரணத்தால் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் சொன்னதன் அடிப்படையில் ஆய்வு செய்துள்ளோம். தண்ணீரில் கழிவு நீர் கலந்துள்ளதாக கூறினார்கள். ஆனால் ஆய்வில் எந்த கலப்படமும் இல்லை. என்ன காரணம் என்பது தெரியவில்லை.

சித்திரை திருவிழா நடைபெற்ற போது அங்கு கொடுக்கப்பட்ட பானகம், நீர், மோரில் ஏதேனும் கலந்து இருக்கலாம் என மருத்துவர்கள் விளக்கம் கொடுத்துள்ளனர். இருப்பினும் அந்த தண்ணீரை சோதனை செய்வதற்காக நாளை காலை ஒவ்வொரு பகுதிகளிலும் சோதனையில் ஈடுபட உள்ளோம்.

குடிநீர் கலப்படம் காரணம் அல்ல - மேயர்

திருச்சி மாநகராட்சி தான் தினந்தோறும் நல்ல முறையில் தண்ணீர் தரக்கூடிய மாநகராட்சி ஆக உள்ளது. பாதாள சாக்கடை பணிகள் அனைத்தும் முற்றிலுமாக முடிவடைந்துள்ளது. எங்கும் குழி தோண்டவில்லை. ஆனால் தண்ணீரில் கலப்படம் எனக் கூறி இருக்கிறார்கள். தண்ணீரில் எந்த இடத்தில் கலப்படம் என ஆய்வு செய்து வருகிறோம். அண்டர் டிரைனேஜ் அடைப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறினார்கள். அதனை சரி செய்ய அதிகாரிகளை நியமித்து உள்ளோம்.

இப்பகுதியில் லாரி மூலம் தண்ணீர் கொடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வீட்டிலும் நாளை சோதனை நடைபெற உள்ளது. இதுவரை மாநகராட்சிக்கு எந்த புகாரும் வரவில்லை. ஆனால் ஜூனியர் இன்ஜினியரிடம் புகார் கொடுத்ததாக கூறுகிறார்கள். இதே போல திருச்சியில் குடிநீரில் கழிவு நீர் கலந்த சம்பவம் கடந்த காலத்தில் நடந்தது. அதனை சரி செய்து உள்ளோம்.

40 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தநல்லூர், சீராதோப்பு உள்ளிட்ட பகுதிகளிலும் வயிற்றுப்போக்கு வாந்தி ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். திருச்சி அரசு மருத்துவமனையில் பெரியவர்கள் 13 பேர், பெரியவர்கள் 10 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்கள் அனைவரும் நலமுடன் இருக்கின்றனர்" எனத் தெரிவித்துள்ளார்.

Trichy edappadi palaniswami annamalai

எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

இதற்கிடையே, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "திருச்சி மாவட்டம் உறையூரில் கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடித்ததால் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாகவும் வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

15 நாட்களாக குடிநீரில் பிரச்சனை இருப்பதாக மக்கள் மாநகராட்சிக்கு புகார் அளித்தும், இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததன் விளைவே இந்த உயிரிழப்புகள் என மக்கள் கூறுகின்றனர். மக்களுக்கு மிகவும் அத்தியாவசியமான குடிநீரைக் கூட சுகாதாரமாக அளிக்க முடியாத அரசு இருந்து என்ன பயன்?

இந்த பொம்மை முதலமைச்சரைப் பார்த்து நான் கேட்கிறேன். அவர் பொறுப்பேற்ற நாள் முதல் தமிழ்நாட்டில் அரசு என்ற ஒன்று செயல்படுகிறதா இல்லையா? ஆட்சிக்கு வருவதற்கு முன் மனுக்களை வாங்கி ஒரு பெட்டியில் போட்டார்; இதனை நான் ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றவில்லை என்றால் கோட்டைக்குள் வந்து என் கதவைத் தட்டிக் கேள்வி கேளுங்கள் என்றார். அந்த மனுக்களையே அவர் இன்னும் நிறைவேற்றிய பாடில்லை!

இப்படிப்பட்ட முதல்வர் ஆளும் அரசும், அதே போன்று மக்களின் மனுக்களுக்கு கொஞ்சமும் மதிப்பளிக்காத அரசாகவே இருக்கிறது! மக்களின் குறைகளை கேளாத, நிறைவேற்ற வக்கில்லாத இந்த திமுக அரசு, ஒரு Coma அரசு! உடனடியாக இந்த உயிரிழப்புகளுக்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்; உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்; தமிழ்நாடு முழுக்க குடிநீரை சுகாதார முறையில் வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்." எனத் தெரிவித்தார்.

அண்ணாமலை காட்டம்

பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வெளியிட்ட பதிவில், "திருச்சி மாநகராட்சி உறையூரில், மாநகராட்சி சார்பாக விநியோகிக்கப்படும் குடிநீரில் கழிவு நீர் கலந்ததால், நான்கு வயது பெண் குழந்தை உட்பட மூன்று உயிர்கள் பலியாகியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிகிறது.

குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக, கடந்த சில நாட்களாகவே பொதுமக்கள் புகாரளித்த நிலையில், மாமன்ற உறுப்பினர், மாநகராட்சி அதிகாரிகள் உட்பட யாருமே நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், குற்றங்களை மூடி மறைக்கும் திமுக அரசின் போக்கு இப்போதும் தொடர்கிறது. சென்னை பல்லாவரத்திலும், இது போலவே குடிநீரில் கழிவு நீர் கலந்ததால் மூன்று உயிர்கள் பறிபோயின. அப்போதும் குடிநீரில் கழிவு நீர் கலக்கவில்லை என்று கூறிய திமுக அரசு, அதற்கான பரிசோதனை அறிக்கையை வெளியிடாமல் ஓடி ஒளிந்து கொண்டது. தற்போதும் அதே கதையை முன்வைக்கிறது. பொதுமக்கள் உயிர் என்ன உங்களுக்கு அத்தனை மலிவாகி விட்டதா?

பொதுமக்களின் அடிப்படைத் தேவையான சுத்தமான குடிநீரைக் கூட வழங்க முடியாத கையாலாகாத மாடல் திமுக அரசு, பொய்களைக் கூறி சமாளிப்பதை விட்டுவிட்டு, உடனடியாக உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தகுந்த சிகிச்சை வழங்கப்பட வேண்டும். அந்தப் பகுதியில் உடனடியாக மருத்துவ முகாம்கள் அமைத்து, பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும். மேலும் இது போன்ற துயர சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க, போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்." எனத் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+