பஞ்சப்பூரில் எனக்கு 300 ஏக்கர் நிலம் இருந்தால், மக்களே எடுத்துக் கொள்ளலாம்.. கேஎன் நேரு விளக்கம்!
திருச்சி: திருச்சி பஞ்சப்பூரில் கேஎன் நேருவுக்கு 300 ஏக்கர் நிலம் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டிய நிலையில், அமைச்சர் கேஎன் நேரு விளக்கம் கொடுத்துள்ளார். பஞ்சப்பூரில் எனக்கு 300 ஏக்கர் நிலம் இருந்தால், அதனை அரசோ அல்லது மக்களோ எடுத்துக் கொள்ளலாம் என்றும், எங்கு வேண்டுமானாலும் கையெழுத்து போடுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
அண்மையில் திருச்சி பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இடம்பெற்றுள்ள இந்த புதிய நிலையத்தை சுற்றி ரியல் எஸ்டேட் தொழில் உச்சத்தில் இருந்து வருகிறது. அதேபோல் பஞ்சப்பூர் பேருந்து நிலையம் கொண்டு வரப்பட்டுள்ளதால், திருச்சியின் வளர்ச்சியும் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது.

இந்த நிலையில் திருச்சியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திருச்சி பேருந்து நிலையம் அமைச்சர் நேருவின் நிலத்தின் மதிப்பு உயர வேண்டும் என்பதற்காகவே அங்கு கட்டப்பட்டது. சிதம்பரம் செட்டியார் அன்னதான டிரஸ்டுக்கு சொந்தமான 17 ஏக்கர் நிலம், அதிகாரத்தை பயன்படுத்த அபகரிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் குழந்தை முதலியார் தோட்டத்தில் உள்ள 18 ஏக்கர் கோயில் நிலத்தை ஜி ஸ்கொயர் நிறுவனம் முறைகேடாக பதிவு செய்துள்ளது. அதிமுக ஆட்சிக்கு வந்த உடன், அந்த சொத்துக்கள் மீட்கப்படும் என்று தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமியின் இந்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்துள்ளார்.
அதன்படி கேஎன் நேரு செய்தியாளர்களிடம் பேசுகையில், திருச்சி பஞ்சப்பூரில் எனக்கு சொத்து இருந்தால் அரசோ அல்லது மக்களோ எடுத்து கொள்ளலாம். எங்கு வேண்டுமானாலும் கையெழுத்து போடுகிறேன். எனக்கும் என் சம்பந்தப்பட்டவர்களுக்கும் அங்கு இடம் இல்லை. அப்படி இடம் இருந்தால் மாவட்ட ஆட்சியர், நகராட்சி எடுத்து கொள்ளலாம். அங்கு எங்கு 300 ஏக்கர் நிலம் உள்ளது?
அப்படி நிலம் எனக்கு இருந்தால், எடப்பாடி பழனிசாமியே எடுத்து கொள்ளலாம். அதேபோல் அதிமுக கூட்டத்தில் பங்கேற்க வந்தவருக்கு உடல்நிலை சரியில்லை என்று ஆம்புலன்ஸை அழைத்திருக்கிறார்கள். ஆனால் ஆம்புலன்ஸை ஓட்டி வந்த நிர்வாகிகளை அதிமுகவினர் அடித்திருக்கிறார்கள். இதில் என்ன நியாயம் இருக்கிறது? ஆம்புலன்ஸை தாக்குவது மிகவும் தவறான விஷயம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications