யாராவது என்ன செருப்பால அடிச்சிட்டு போங்க.. காத்திருக்கும் அய்யாக்கண்ணு.. திருச்சியில் போராட்டம்
திருச்சி: எங்கள் போராட்டத்தில் தவறு இருந்தால் செருப்பால் அடியுங்கள் என்று செருப்பை முன்வைத்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு நூதன போராட்டம் நடத்தியுள்ளார்.
Recommended Video
அய்யாக்கண்ணு தலைமையில் 30க்கு மேற்பட்ட விவசாயிகள் திருச்சியில் திருச்சி - கரூர் பைபாஸ், அண்ணாமலை நகர், மலர் சாலையில் உள்ள தலைமை அலுவலகத்தில் முன்பு 37வது நாளாக உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் இன்று அவர் பேசுகையில், கூறியதாவது:

போராட உரிமை
ஜனநாயக நாட்டில் ஆளுங்கட்சிகாரர்கள் கொடுத்த வாக்குறுதியை செய்யுங்கள் என்று கேட்பதற்கு அரசியல் அமைப்பு சட்டம் விவசாயிகளுக்கு உரிமை வழங்கியுள்ளது. அதன்படி மோடி அறிவித்த இரண்டு மடங்கு லாபம் தரும் விலையை கொடுங்கள் என்று கேட்பதற்கும், லாபகரமான விலையை தராத மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் வாங்க வேண்டும் என்றும், கோதாவரி-காவிரி இணைப்பை நிறைவேற்ற வேண்டும் என்று போராடுவதற்கும் விவசாயிகளுக்கு உரிமை இருப்பதனால் தான் நாங்கள் போராடி வருகிறோம். எங்கள் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் போராடுகிறது.

செருப்பை வைத்து அடிக்கட்டும்
இதற்காக, போராடுவதற்கு உரிமையில்லை என்று எந்த அரசியல் கட்சியும் நிரூபித்தால் நாங்கள் போராட்டம் நடத்தும் இடத்தில் கழட்டி வைக்கும் செருப்பை கொண்டு எங்களை அடிக்கலாம். ஜனநாயக நாட்டில் விவசாயிகளை யார் வேண்டுமானாலும் அடிக்கலாம் என்று கூறி, செருப்பை கழட்டி வைத்து சவால் விடும் நூதன போராட்டம் நடத்தினார், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு.

நெல் பாதிப்பு
தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டி அளித்த மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு, தற்போது ஏற்பட்ட மழையினால் அனைத்து நெல்லும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் ஹெக்டேருக்கு 20 ஆயிரம் ரூபாய் தருவதாக கூறியுள்ளார். இது எதற்கும் பயன்படாது. அதிகபட்சமான நிவாரண தொகை வழங்க வேண்டும்.

இரு மடங்கு விலை
விவசாயிகளுக்கு மத்திய அரசும் சரி, மாநில அரசும் சரி எதையும் செய்வதில்லை, மீனவர்களுக்கு தரும் நிவாரணம் விவசாயிகளுக்கு வழங்குவதில்லை. மத்திய மோடி அரசு இருமடங்கு விலை தருவதாக கூறி இதுவரை தரவில்லை. எனவே, மாநில அரசு விவசாயிகளுக்கு உரிய உதவிகள் செய்ய வேண்டும். நாங்கள் போராட்டத்தில் கூறும் கருத்துகளுக்கு எதிராக இருந்தால் எங்களை செருப்பால் அடிக்கலாம் என கூறி இருந்தோம். ஆனால் இதுவரை ஒருவரும் வரவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

டெல்லியில் போராட்டம்
2017ம் ஆண்டு டெல்லியில் மத்திய அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 141 நாட்கள் அய்யாகண்ணு தலைமையில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டது நினைவிருக்கலாம். அப்போது அரை நிர்வாண போராட்டம், மண்டை ஓடு அணிந்து போராட்டம் என பல வகை போராட்டங்களை செய்து, தேசிய அளவில் அய்யாக்கண்ணு கவனம் ஈர்த்தவராகும்.












Click it and Unblock the Notifications