தேவாலயம், அம்மன் கோவில், பள்ளிவாசல்.. அடுத்தடுத்து விசிட் அடித்த விஜய்! பிரச்சாரத்தில் மதநல்லிணக்கம்
திருச்சி: திருச்சி கிழக்கு தொகுதியில் இன்று ரோடு ஷோ நடத்திய தவெக தலைவர் விஜய், புனித அந்தோணியார் தேவாலயத்தில் மண்டி போட்டு நகர்ந்து பிரார்த்தனை செய்தார். அதைத்தொடர்ந்து, பச்சநாச்சி அம்மன் கோவிலுக்குச் சென்று மனமுருகி வேண்டினார். அதோடு, பள்ளிவாசலுக்கும் சென்றார் விஜய்.
சட்டசபை தேர்தலில் தவெக தலைவர் விஜய் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் சட்டசபை தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் ஏப்ரல் 2 ஆம் தேதி திருச்சியில் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு மரக்கடை பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அதன் பிறகு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று தவெகவுக்கு வாக்கு சேகரித்து வந்தார்.

இந்நிலையில் மீண்டும் இன்று மதியம் 3 மணி முதல் 8 மணி வரை திருச்சி கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள அக்கட்சியினர் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோரியிருந்தனர் அவர்களுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியது. அதனைத் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொள்ள விஜய் சென்னையில் இருந்து தனி விமான மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்தார்.
திருச்சி விமான நிலையம் அருகே உள்ள வயர்லெஸ் சாலையில் இருந்து அவர் ரோடு ஷோ வை தொடங்கினார். வயர்லெஸ் சாலை கேகே நகர் காஜாமலை கொட்டப்பட்டு ஆகிய பகுதிகள் வழியாக மதியம் மூன்று முப்பது மணி முதல் 5.30 மணி வரை ரோடு ஷோ நடத்திவிட்டு மீண்டும் திருச்சி விமான நிலையத்திற்கு சென்றார். அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டார்.
தவெக தலைவர் விஜய்க்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ரோடு ஷோ வரும்போது வழிநெடுக திரண்டு இருந்த விஜய் ரசிகர்கள் விஜய்யை உற்சாகமாக வரவேற்றனர். அவருக்கு பல இடங்களில் பரிசுகள் வழங்கப்பட்டன.
ரோடு ஷோவின்போது வயர்லெஸ் சாலையில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்திற்கு சென்ற விஜய் அங்கு மண்டியிட்டு நகர்ந்து சென்று பிரார்த்தனை செய்தார். அதேபோல கேகே நகர் பகுதியில் உள்ள பள்ளிவாசலுக்கு சென்று பள்ளிவாசலில் உள்ள நிர்வாகிகளை சந்தித்தார். அங்கு தொழுகை செய்தார். பின்னர் கொட்டப்பட்டில் உள்ள பச்ச நாச்சியம்மன் கோவிலுக்கு சென்று அங்கும் வழிபாடு செய்தார். பச்ச நாச்சி அம்மன் கோவிலிலுக்கு சென்று தரிசித்து, நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கி மனமுருகி வேண்டிக்கொண்டார் விஜய்.
தேர்தல் நேரத்தில் விஜய் 234 தொகுதிகளுக்கும் சென்று பிரச்சாரம் செய்வார் என அக்கட்சியினர் தொடர்ந்து கூறி வந்தனர். ஆனால் தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவர், பெரிதாக எங்கும் பிரச்சாரத்திற்கு செல்லவில்லை. அவர் போட்டியிடும் திருச்சி கிழக்கு தொகுதியில் இன்று இரண்டாம் முறையாக பிரச்சாரம் செய்துள்ளார்.
எனினும் இன்றைய பிரச்சாரத்தின்போது மக்களிடம் எதுவும் பேசாமல் ரோடு ஷோ மட்டும் செய்துவிட்டு சென்றார். விசில் ஊதி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 5 மணி நேரத்திற்கு அனுமதி வாங்கிவிட்டு இரண்டு மணி நேரத்தில் ரோடு ஷோவை முடித்துவிட்டு புறப்பட்டு சென்றார். திருச்சி வந்த விஜய்யை காண திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாவட்டங்களான கரூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான வருகை தந்தனர்.












Click it and Unblock the Notifications