தமிழக கோயில்களில் மரபு மாறாமல் ஆன்மீக பணி நடக்க தெய்வீக கைங்கர்ய பேரவை வலியுறுத்தல்
திருச்சி: தமிழகக் கோயில்களில் மரபு மாறாமல் ஆன்மிக பணி நடைபெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெய்வீக கைங்கர்ய பேரவை வலியுறுத்தி உள்ளது.
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வராத கோவில்களில் பணிபுரியும் சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள், அர்ச்சகர்கள், ஓதுவார்கள், பிரபந்தம் வாசிப்பவர்கள், பரம்பரை அறங்காவலர்கள், ஸ்ரீ பாதம் தாங்கிகள், மடப்பள்ளி ஊழியர்கள், இசைக்கலைஞர்களை ஒருங்கிணைத்து தெய்வீக கைங்கர்ய பேரவை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக தமிழ்நாடு விஸ்வ இந்து பரிஷத் மாநில தலைவர் ஆர்ஆர். கோபால்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்த அமைப்பின் முதலாவது ஆலோசனைக்கூட்டம் திருச்சியில் நேற்று நடந்தது. இதில் ஆர்.ஆர். கோபால்ஜி பேசியதாவது:தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு அறநிலையத்துறை சார்ந்த கோயில்களில் பாரம்பரியமாக கைங்கர்யம் செய்து வருபவர்களுக்கு நெருக்கடிகள் தரப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறிவைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
தமிழக முதல்வர் தனது தேர்தல் பிரசாரத்தின்போது, ''இந்து சமய வழிபாட்டு முறைகளில் தலையிடமாட்டோம்'' என்று கூறியிருந்தார். ஆனால், செயல்பாடு மாறுபாடாக இருக்கிறது. சம்பந்தப்பட்ட பணியாளர்கள் தங்கள் உரிமைகளை பாதுகாக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக அரசு மேற்கொண்டு வரும் இந்த நடவடிக்கைகளை, கோயில்களில் பணியாற்றும் உள்துறை பணியாளர்கள் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்தால் மட்டுமே சவால்களை சந்தித்து, தங்கள் குறிக்கோளில் வெற்றி காண முடியும். ஒரே நோக்கமிருந்தும் பல்வேறு சங்கங்களாகவும், அமைப்புகளாகவும் செயல்படும் அனைவரையும் ஒன்று சேர்க்கும் வகையில் இந்த தெய்வீக கைங்கர்ய பேரவை ஏற்படுத்தப்படுகிறது. இப்போதுள்ள சூழ்நிலையில், கோயில் பணியாளர்கள், தங்களுக்குள் பேதம் பார்க்காமல், ஒன்று சேர்ந்தால் மட்டுமே தொடர்ந்து ஏற்படும் நெருக்கடிகளையும், சவால்களையும் சந்தித்து வெற்றிபெற முடியும். வெற்றி பெறுவோம். இவ்வாறு கோபால்ஜி பேசினார்.
இந்த கூட்டத்தில் தமிழகத்தில் பல்வேறு பெயர்களில் செயல்பட்டுவரும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூஜாரிகள் சங்கங்கள் அனைத்தும் இணைந்து செயல்படுவது; மரபுகள் மாறாமல், கோயில்களில் ஆன்மிக பணிகள் நடைபெற ஆவண செய்யுமாறு தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்வது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications