மண்ணச்சநல்லூர் மல்லுக்கட்டு.. பரமேஸ்வரி அவுட்.. பொன்.செல்வராஜ் இன்.. அதிமுகவில் யாருக்கு வாய்ப்பு..?
திருச்சி: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதியில் அதிமுகவின் சிட்டிங் எம்.எல்.ஏ.வான பரமேஸ்வரிக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்க அக்கட்சியின் தலைமைக்கு துளியும் விருப்பமில்லை.
காரணம் ஹைமாஸ் விளக்கு அமைப்பதில் வெளியான ஆடியோ விவகாரம் தொடங்கி ஒன்றியச் செயலாளருக்கு பளார் விட்டது முதல் சர்ச்சைக்கு மேல் சர்ச்சைகளில் சிக்கியவர் பரமேஸ்வரி முருகன் எம்.எல்.ஏ.
இந்நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் மண்ணச்சநல்லூர் தொகுதியில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது அங்கு பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
திருச்சி மாவட்டம்
திருச்சி மாவட்டத்தில் உள்ள மண்ணச்சநல்லூரை பொறுத்தவரை அரிசி ஆலைகள் அதிகம் உள்ள பகுதியாகும். மண்ணச்சநல்லூர் பொன்னி அரிசி என்றால் அதற்கு தனி மவுசுதான், அந்தளவுக்கு அங்கு நெல் சாகுபடி அதிகளவில் நடைபெறுகிறது. இப்படிப்பட்ட மண்ணச்சநல்லூர் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் அதிமுகவை சேர்ந்த பரமேஸ்வரி முருகன். ஜெயலலிதா இருக்கும் வரை இருந்த இடம் தெரியாமல் இருந்த இவர் அதற்கு பிறகு தனது தடாலடிகளை தொடங்கினார்.
புகார்கள்
சமயபுரம் கோயிலில் ஹைமாஸ் விளக்கும் அமைக்கும் ஒப்பந்த பணிக்காக கமிஷன் கேட்டது, ஒன்றியச் செயலாளருக்கு பளார் விட்டது, மாளிகை போல் வீடு கட்டியது, தனது வீடு திறப்பு விழாவுக்கான நாளிதழ் விளம்பரத்தில் ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். படங்களை தவிர்த்தது என இவர் மேல் ஏராளமான புகார்கள் தலைமையிடம் குவிந்துள்ளன.
யாருக்கு வாய்ப்பு
இதனால் வரும் தேர்தலில் புதிய முகம் ஒன்றுக்கு மண்ணச்சநல்லூர் தொகுதியில் வாய்ப்பு வழங்குவது என முடிவெடுத்திருக்கிறார் முதலமைச்சர் இ.பி.எஸ். அந்த வகையில் மாநில எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் பொன்.செல்வராஜ் வேட்பாளர் ரேஸில் முதலிடத்தில் இருக்கிறார்.
சர்வே
இதனிடையே இவருக்கு போட்டியாக முன்னாள் அமைச்சர் பூனாட்சி, முன்னாள் எம்.எல்.ஏ. பிரின்ஸ் தங்கவேல் உள்ளிட்டோரும் சீட் கேட்டு வருகின்றனர். ஆனால் இவர்களெல்லாம் இதற்கு முன்னர் எம்.எல்.ஏ.வாக இருந்தவர்கள் என்பதால், ஜெயலலிதா பாணியில் இதுவரை எம்.எல்.ஏ.வாகாத பொன்.செல்வராஜை வேட்பாளராக களமிறக்க அதிமுக தலைமை முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
கூடுதல் ப்ளஸ்
இதுமட்டுமல்லாமல் முத்தரையர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் பொன்.செல்வராஜுக்கு கூடுதல் பிளஸாக உள்ளது. இதனிடையே அதே முத்தரையர் சமுதாயத்தை சேர்ந்தவரும், முன்னாள் அமைச்சர் செல்வராஜ் மகனுமான என்.எஸ்.கே. கருணை ராஜா திமுக சார்பில் அங்கு களமிறங்குவார் எனத் தெரிகிறது.