இஸ்லாமியர்களை புறக்கணிக்கிறாரா அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்... திருச்சியில் பரபரப்பு போஸ்டர்..!
திருச்சி: இஸ்லாமியர்களை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக கூறி திருச்சி பாலக்கரை பகுதியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவை இஸ்லாமியர்கள் புறக்கணிக்க வேண்டும் எனவும் அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியில் மேற்கண்ட இந்த வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
அதிமுகவை பொறுத்தவரை நிர்வாக வசதிக்காக திருச்சி மாநகர், புறநகர், வடக்கு என்று மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் மாநகர் மாவட்டச் செயலாளராக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நியமனம் செய்யப்பட்டார். இவரது கட்டுப்பாட்டில் திருச்சி கிழக்கு, மேற்குத் தொகுதிகள் அடங்கியுள்ளன.
பொதுக்குழுவை எப்படி ஒருங்கிணைப்பது... திமுக மாவட்டச் செயலாளர்களிடம் ஸ்டாலின் பேசியது என்ன..?
இந்நிலையில் திருச்சி பாலக்கரை பகுதி அதிமுக செயலாளராக இருந்த கலீல் ரகுமான் என்பவரை அந்தப் பதவியிலிருந்து நீக்கிய அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், அவருக்குப் பதிலாக சுரேஷ்குப்தா என்பவரை நியமித்திருக்கிறார். இதனை கண்டிக்கும் வகையில் திருச்சி மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் அமைப்பு சார்பில் திருச்சி மாநகரம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன.
அதில் இஸ்லாமியர் என்பதற்காக கலீல் ரகுமான் என்பவரிடம் இருந்து கட்சிப் பதவி பறிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனையும், அதிமுகவையும் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் இஸ்லாமியர்கள் புறக்கணிப்பார்கள் என்றும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இது திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு அதிமுக தலைமை வரை தகவல் சென்றிருக்கிறது.