மைனஸ் ஆகுமா திமுக கூட்டணி.. பார்க்கத்தானே போறீங்க.. விஜய்க்கு அமைச்சர் மதிவேந்தன் பதிலடி
திருச்சி: திமுக கூட்டணி மைனஸ் ஆகுமா என்று நீங்கள் பார்க்கத்தானே போறீங்க. அவருடைய இஷ்டம்போல விஜய் எதையோ பேசுகிறார். மக்களின் கையில் தான் இருக்கு எல்லாமே. 2026 இல் பொறுத்திருந்து பாருங்கள் என்று அமைச்சர் மதிவேந்தன் விஜய் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
விக்கிரவாண்டியில் நடைபெற்ற தவெகவின் முதல் அரசியல் மாநாட்டிலேயே திமுகவையும், பாஜகவையும் விஜய் கடுமையாக விமர்சித்திருந்தார். அதேசமயம் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற போகிறபோக்கில் ஒரு வெடிகுண்டையும் வீசினார். அரசியல் களத்தில் அனல் பறக்கும் விவதமாக இப்பிரச்னை எழுந்தது.

Image credit : Vikadan
இதைத்தொடர்ந்து, அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் ஒரே மேடையில் விஜயும், திருமாவளவனும் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியானது பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இதுதொடர்பான பல்வேறு விவாதங்கள் எழுந்த நிலையில், இந்நிகழ்ச்சியில் திருமாவளவன் பங்கேற்க மாட்டார் என சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.
திருமாவளவன் பங்கேற்காததற்கு அரசியல் அழுத்தமே காரணம் என்று பல்வேறு விவதாங்கள் எழுந்தன. மேலும், புத்தகத்தை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெளியிடுகிறார் என்பதால்தான் திருமா பங்கேற்கவில்லை என்று அரசியல் விமர்சகர்கள் கூறியிருந்தனர். விகடம் பதிப்பகம் சார்பில், சென்னை வர்த்தக மையத்தில் 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' எனும் புத்தக வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
புத்தகத்தை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், 2026 தேர்தலில் திமுக கூட்டணி மைனஸ் ஆகும் என்றும், மன்னராட்சி குறித்தும் பேசியிருந்தார். மேலும், விசிக தலைவர் திருமாவளவனால் இன்று இந்த நிகழ்ச்சிக்கு வர முடியாமல் போய்விட்டது. அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கூட கலந்துகொள்ள முடியாத அளவிற்கு அழுத்தம் இருப்பதை என்னால் யூகிக்க முடிந்தாலும் அவர் மனசு முழுக்க முழுக்க இனி நம்முடன் தான் இருக்கும் என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து, அமைச்சர் மதிவேந்தன் செய்தியாளர்களிடம் கூறியதாது: திமுக கூட்டணி மைனஸ் ஆகுமா என்று நீங்கள் பார்க்க தானே போறீங்க. அவருடைய இஷ்டம்போல விஜய் எதையோ பேசுகிறார். மக்களின் கையில் தான் இருக்கு எல்லாமே. 2026 இல் பொறுத்திருந்து பாருங்கள். எந்தவொரு பிளவுபடுத்தும் சக்திக்கும் இடமளிக்க மாட்டோம் என முதல்வர் ஸ்டாலின் தெளிவாகக் கூறியுள்ளார். கண்டிப்பாக வரும் சட்டபேரவைத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும்.
எல்லோருக்கும் எல்லாம் என்கிற வகையில், எல்லா மக்களுக்குமான ஆட்சியாக திமுக அரசு உள்ளது. இதுவரைக்கும் இல்லாத திட்டங்கள் அனைத்தையும் மக்களுக்காக முதல்வர் கொண்டு வந்துவிட்டார். திருவண்ணாமலை, சாத்தனூர் உடைப்பு குறித்த எடப்பாடி கருத்துக்கு, பொதுப் பணித் துறை அமைச்சர் உரிய விளக்கம் கொடுத்துள்ளார். அதிக அளவிலான கன அடி தண்ணீர் வந்துள்ளதால் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இயற்கை சீற்றத்துக்கு முன்னால் எவ்வளவு சீரிய முறையில் கட்டினாலும் அதிக கன அடி தண்ணீர் வந்ததால் எதுவும் செய்ய முடியாது என்றார்.












Click it and Unblock the Notifications