போதும் காங்.குக்கு பல்லக்கு தூக்கியது.. கீழே போட்ருவோமா.. அதிர வைத்த கே.என். நேரு பேச்சு!
திருச்சி: காங்கிரஸ் கட்சிக்கு இன்னும் எத்தனை காலம்தான் திமுக பல்லக்கு திமுக பல்லக்கு தூக்குவது என முன்னாள் அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே தண்ணீர் பிரச்சினை தலைதூக்கத் தொடங்கிவிட்டது. இந்த தண்ணீர் பிரச்சினையை போக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு ஆகும்.
10 நாட்களுக்கு ஒரு முறை 15 நாட்களுக்கு ஒரு முறை வரும் 2 குடம் தண்ணீருக்காக மக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசும் ஆலோசனை கூட்டங்களை நடத்தி வரும் நிலையில் சுமூகத் தீர்வு ஏதும் எட்டப்படவில்லை.
ஸ்டாலின்
இந்த நிலையில் அமைச்சர் எஸ்பி வேலுமணியோ தமிழகத்தில் தண்ணீர் பஞ்சமே இல்லை என கூறியுள்ளார். இதற்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில் உள்ளாட்சித்துறை அமைச்சரின் அக்கறையற்ற தன்மையால் குடிநீரின்றி மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
ஆர்ப்பாட்டம்
எதிர்க்கட்சிகள் வீண் வதந்திகளை பரப்புவதாக முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க அமைச்சர் முயற்சி செய்கிறார் என குற்றம்சாட்டிய ஸ்டாலின் தமிழகத்தில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்திருந்தார்.
ஆர்ப்பாட்டம்
அதன்படி இன்றைய தினம் திமுக சென்னை, திருச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் காலிக் குடங்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது. திருச்சியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் கே என் நேரு தலைமை தாங்கினார்.
அதிர்ச்சி
அவர் கூறுகையில் காங்கிரஸுக்கு இன்னும் எத்தனை காலம்தான் திமுக பல்லக்கு தூக்குவது? உள்ளாட்சி தேர்தலில் திமுக தனித்து போட்டியிட வேண்டும். அதிமுக அரசு காவிரி நீரை சேமிக்காமல் கடலில் கலக்கி வீணடித்தது என பேசினார். கூட்டணி கட்சியான காங்கிரஸை இது போல் கேஎன் நேரு கடுமையாக விமர்சனம் செய்துள்ளது கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உதயநிதி பேச்சு
நாங்குநேரி தொகுதி எம்எல்ஏவாக இருந்த எச் வசந்தகுமார் ராஜினாமா செய்துவிட்டார். அந்த தொகுதியில் மீண்டும் போட்டியிட திமுகவிடம் கேட்டு பெற காங்கிரஸ் முயற்சித்து வருகிறது. இந்த நிலையில் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அத்தொகுதியை திமுகவுக்கு காங்கிரஸ் விட்டுத் தர வேண்டும். இதற்கு திருநாவுக்கரசர் பரிந்துரைக்க வேண்டும். அத்தொகுதியில் திமுக வெற்றி பெறும் என திருநாவுக்கரசரை மேடையில் வைத்துக் கொண்டே உதயநிதி சொன்னார். அதோடு கூட்டணி கட்சிகளுக்கு கணிசமான இடங்கள் மட்டும் கொடுத்து திமுக அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என உதயநிதி பேசியது சர்ச்சையை எழுப்பிய நிலையில் கே என் நேரு பேசியது மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.