வாய்தவறி வந்த வார்த்தை.. தொண்டர்களிடம் மன்னிப்பு கேட்ட உதயநிதி.. திருச்சி பிரசாரத்தில் என்ன நடந்தது?
திருச்சி: திருச்சி மதிமுக வேட்பாளர் துரை வைகோவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாய்த்தவறி கூறிய வார்த்தையால் தொண்டர்களிடம் மன்னிப்பு கேட்டார்.
தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள லோக்சபா தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வரும் 19 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் திமுக கூட்டணியில் வைகோவின் மதிமுகவுக்கு திருச்சி தொகுதி வழங்கப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் மதிமுக வேட்பாளராக வைகோவின் மகன் துரை வைகோ போட்டியிடுகிறார்.

தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க இந்திய தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. மாறாக தீப்பெட்டி சின்னம் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து திமுக கூட்டணியில் திருச்சி தொகுதியில் துரை வைகோ தீப்பெட்டி சின்னத்தில் களமிறங்கி உள்ளார்.
இந்நிலையில் தான் திருச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தீவிரமாக தேர்தல் பிரசாரம் செய்தார். துரை வைகோவிற்கு ஆதரவாக அவர் வாக்கு சேகரித்தார். திறந்த வாகனத்தின் மீது உதயநிதி ஸ்டாலின் நின்று பிரசாரம் செய்தார். அவர் அருகே தீப்பெட்டி சின்னம் பொறிக்கப்பட்ட பதாகையை ஏந்தியபடி நின்றார். அவருக்கு ஆதரவாக உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
அப்போது உதயநிதி ஸ்டாலின் தமிழக அரசு செயல்படுத்தி உள்ள திட்டங்களை பட்டியலிட்டார். அதன்பிறகு ‛‛தமிழக அரசின் சாதனைகள் தொடர வேண்டும் என்றால் வரும் 19 ம் தேதி வாக்குச்சாவடிக்கு சென்று உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.. பண்ணுவீங்களா?''என கேட்டார். அதற்கு கூட்டத்தில் இருந்த தொண்டர்கள் ‛பண்ணுவோம்' என பதிலளித்தனர்.
இருப்பினும் ஒரு தரப்பை சேர்ந்த தொண்டர்கள், ‛‛உதயசூரியன் இல்லை.. தீப்பெட்டி'' என உதயநிதி ஸ்டாலினிடம் கூறினர். அதாவது துரை வைகோ உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவில்லை. தீப்பெட்டி சின்னத்தில் தான் போட்டியிடுகிறார் என்பதை உதயநிதி ஸ்டாலினிடம் தெரிவித்தனர்.
இதை கேட்டதும் சுதாரித்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் சிரித்தப்படி, ‛‛மன்னிச்சிடுங்க.. நம்முடைய கூட்டணி சின்னம் தீப்பெட்டியில் நீங்கள் வாக்களிக்க வேண்டும். நான் தப்பு பண்ணிலாலும் நீங்கள் தெளிவா இருக்கீங்க.. நான் உங்களை ‛செக்' செய்தேன்'' என்றார். இதை கேட்டவுடன் தொண்டர்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது.
மேலும் உதயநிதி ஸ்டாலின், ‛‛நீங்கள் எல்லோரும் தெளிவாக இருக்கீங்களானு பார்த்தேன். நீங்கள் அனைவரும் தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து சகோதரர் துரை வைகோவையை 5 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்'' எனக்கூறினார்.












Click it and Unblock the Notifications