இன்று எத்தனை மனுக்கள் வந்தன..? என்னென்ன பிரச்சனைகள் உள்ளன... அன்றாடம் விசாரிக்கும் அமைச்சர்..!
திருச்சி: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனக்கிருக்கும் பரபரப்பான வேலை பளுவுக்கு மத்தியிலும், தினமும் தனது அலுவலகத்திற்கு வரும் கோரிக்கை மனுக்கள் தொடர்பான விவரத்தை கேட்கத் தவறுவதில்லை.
வெளியூர்களில் இருந்தால் தொலைபேசி மூலமும் திருச்சியில் இருந்தால் நேரடியாக அலுவலகத்திற்கே சென்றும் மக்களின் புகார்களையும், தேவைகளையும் கேட்டறிந்துகொள்கிறார்.
தனது திருவெறும்பூர் தொகுதிகுட்பட்ட மனுக்கள் மட்டுமல்லாமல் திருச்சி கிழக்கு, மணப்பாறை என திருச்சி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்ற தொகுதி மக்களின் மனுக்களை பெறவும் ஆட்கள் நியமித்திருக்கிறார்.

திருச்சி தெற்கு
தமிழக அமைச்சரவையில் சுறுசுறுப்பாக இயங்கக்கூடியவர்களில் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் ஒருவர். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதியிலிருந்து 2-வது முறையாக வெற்றி பெற்றுள்ள இவர், தனது தொகுதி மக்களுக்கு அவர்கள் எதிர்பார்த்ததை விட கூடுதலாக வளர்ச்சிப் திட்டங்களை கொடுக்க வேண்டும் என நினைக்கிறார். தற்போது கொரோனா தடுப்பு பணிகள் ஓரளவு நிறைவடைந்துவிட்டதால், திருச்சி திமுக தெற்கு மாவட்டச் செயலாளர் என்ற முறையில் தனது பார்வையை மணப்பாறை, திருச்சி கிழக்கு ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகள் பக்கமும் திருப்பியிருக்கிறார்.

நேரடி ஆய்வு
மணப்பாறை தொகுதிகுட்பட்ட கோவில்பட்டி அரசுப் பள்ளியில் ஆய்வுக்கு சென்ற அவர், தலைமையாசிரியர் அறையில் அமர்ந்து அவர் கூறும் விளக்கத்தை கேட்டுவிட்டு வராமல், நேரடியாக ஆய்வகம், கழிவறை, மைதானம் என பள்ளி முழுவதும் ஒரு ரவுண்ட் அடித்து குறைகளை சுட்டிக்காட்டி அதை தீர்க்க அந்த ஸ்பாட்டிலேயே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

துறை ரீதியாக
பொதுவாகவே அமைச்சர்களுக்கு துறை சார்ந்த பணிகள் அதிகமாக இருக்கும் என்பதால், பொதுமக்களிடம் இருந்து வரும் மனுக்களை அவர்களது அலுவலக ஊழியர்கள் தான் முழுமையாக கையாள்வார்கள். எந்த விவரமும் அமைச்சர்களின் காதுகளுக்கே சென்று சேராது. ஆனால் அன்பில் மகேஸை பொறுத்தவரை சென்னையோ -திருச்சியோ அல்லது வெளி மாவட்ட பயணங்களோ எங்கிருந்தாலும் தனக்கு வந்த மனுக்களின் விவரத்தையும், எண்ணிக்கையும், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் தினமும் கேட்டறிந்துகொள்கிறார்.

கனிவு
அதேபோல் தனது அலுவலகத்தை நாடி வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும் என்பது தனது அலுவலக ஊழியர்களுக்கு அன்பில் மகேஷ் விடுத்துள்ள அன்பு கட்டளை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் வருவார்கள் என்பதால் அவர்களிடம் பதிலுக்கு பதில் கோபம் காட்டாமல் இன் முகத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என அலுவலக ஊழியர்களுக்கு அறிவுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதையே எல்லா அமைச்சர்களும் பின்பற்றலாமே.












Click it and Unblock the Notifications