அதிமுக பாஜக தொகுதி பங்கீட்டில் இழுபறி.. நயினார் நாகேந்திரன் அப்டேட்
திருச்சி: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். நாம் தமிழர், தவெக கட்சிகளும் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். அதிமுக பாஜக கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
திருச்சியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விஜய்க்கு சிபிஐ முதல்முறை அழைப்பு விடுக்கவில்லை. இது இரண்டாவது முறையோ அல்லது மூன்றாவது முறையோ விடுக்கப்பட்டுள்ள அழைப்பு. இதற்கும் பாஜகவுக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை. நாங்கள் அவருக்கு அழுத்தம் கொடுக்கவில்லை.

தமிழ் கலாச்சாரம்
பாஜக தவெக கூட்டணி என்பது வதந்தி. அப்படி எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. வதந்தி தான் ஓடிக் கொண்டிருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர் எடப்பாடி பழனிசாமியும், நாங்களும் இன்னும் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கவில்வை. பேச்சுவார்த்தை தொடங்கியவுடன் உங்களுக்கு அதிகாரபூர்வ தகவல்களை உடனடியாக வழங்குவோம்.
பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய அமைச்சர் அமித்ஷாவும் தேர்தல் வந்தால் மட்டும் தமிழ்நாடு வரவில்லை. ரூ.4,700 கோடியில் தூத்துக்குடி துறைமுகம் அமைத்தது, வந்தே பாரத் ரயில் தொடக்கம், செஸ் விளையாட்டு போட்டி தொடக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக தமிழ்நாடு வந்துள்ளனர். பிரதமர் மலேசியா உள்ளிட்ட எந்த நாடு சென்றாலும் தமிழ் மொழி, தமிழ் கலாசாரத்தை பறைசாற்றுகிறார்.
லாக்கப் டெத் மரணங்கள்
இதையெல்லாம் எதிர்க்கட்சிகள் மறந்துவிட்டனர். அவர்கள் எத்தனை முறை வந்துள்ளனர், எவ்வளவு நிதி அளித்துள்ளனர் என ஊடகங்கள் திருப்பி கேட்பதில்லை. தமிழ்நாட்டிற்காக மத்திய அரசு ரூ.14.5 கோடி நிதி அளித்துள்ளனர். தமிழை வளர்ப்பதற்காக திமுகவும், முதலமைச்சர் ஸ்டாலினும், உதயநிதியும் என்ன செய்திருக்கிறார்கள். இவர்கள் தமிழ் கலாச்சாரத்தை வளர்த்தார்களா.
சாத்தான்குளத்தில் தந்தை மகன் காவல் கஸ்டடியில் இறந்தபோது ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தினார். சட்டமன்றத்தில் சட்டையை கிழித்துக் கொண்டு ஓடி வந்தார். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 34 லாக்கப் டெத் மரணங்கள் நடந்துள்ளன. நாமக்கலில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.
தேர்தல் வாக்குறுதிகள்
சொத்து வரி 300 சதவீதம் கூட்டியுள்ளனர். மின் கட்டணம் உயர்த்தியுள்ளனர். பெட்ரோல் டீசல் விலை, சமையல் எரிவாயு மானியம், 1000 தடுப்பணைகள் கட்டுவோம் என்றனர். ஒரு தடுப்பணை கூட கட்டவில்லை. சட்டம் ஒழுங்கு எங்காவது சரியாக இருக்கிறதா. போதை பொருளில் எந்த விதமான முன் விரோதமும் இல்லாதவர்களை கூட வெட்டுகிறார்கள்" என்றார்.












Click it and Unblock the Notifications