தமிழகத்தில் பாஜகவுக்கு அஸ்திவாரமும் இல்லை.. ஆதரவும் இல்லை.. திருநாவுக்கரசர் தாக்கு
திருச்சி: தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு அஸ்திவாரமும் இல்லை ஆதரவும் இல்லை என்று லோக்சபா எம்.பி. திருநாவுக்கரசர் சாடியுள்ளார்.
திருச்சியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து மனுக்களை நேற்று பெற்றுக் கொண்டார் திருநாவுக்கரசர். பின்னர் செய்தியாளர்களிடம் திருநாவுக்கரசர் கூறியதாவது:

எம்.ஜி.ஆர். கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் காலத்திருலிருந்து பேசப்பட்டு வரும் காவிரி - குண்டாறு இணைப்பு திட்டம் இப்போது அறிவிக்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டிருப்பது நல்லது. இருப்பினும் அனைத்துத் துறை அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி திட்டம் குறித்து விரிவான தகவல்களைப் பகிா்ந்து கொண்டால் நல்லது. அப்போதுதான் விடுபட்ட இடங்களை இணைக்க வலியுறுத்த முடியும்.
தமிழ்நாட்டில் பாஜகவுக்கு அஸ்திவாரமும் இல்லை, ஆதரவும் இல்லை. நரேந்திர மோடி பிரதமரான பிறகு தமிழ்நாட்டிற்கு எதுவும் செய்யவில்லை.
வேலையின்றி உள்ள ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தவோ, புதிய தொழிற்சாலைகளோ வரவில்லை. லோக்சபா தேர்தல் வெற்றியை போல் சட்டசபை தேர்தலிலும் அமோக வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வராக பதவியேற்பார். குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
இதற்கு தாங்கள் செய்வது சரிதான், நாங்கள் அதை மாற்ற மாட்டோம் என்றால் அதற்கான பலனை தேர்தல் மூலம் மக்கள் தான் தருவார்கள். அதை அனுபவித்தாக வேண்டும். இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.












Click it and Unblock the Notifications