அதிமுகவில் பாஜக தலையீடா? எல்லா குட்டியும் எங்க பக்கம்.. ஓபிஎஸுக்கு எதிராக பாய்ன்டை பிடித்த பழனிசாமி
திருச்சி: ஆறுகுட்டி போல் எந்த குட்டியும் எங்கும் செல்லவில்லை என்றும், எல்லா குட்டிகளும் தங்களிடையே உள்ளது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து இருக்கிறார்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, "ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்திய ஆறுமுகசாமி விசாரணை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும்.
அந்த அறிக்கை குறித்து கருத்து சொல்வது சரியாக இருக்காது. அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என ஓபிஎஸ் கூறியது அவருடைய நிலைப்பாடு.

எல்லா குட்டிகளும் எங்கள் பக்கம்
சேர்ந்து செயல்பட வேண்டாம் என்பது தொண்டர்களுடைய நிலைப்பாடு. அதுவே என்னுடைய நிலைப்பாடும். பதவி ஆசை இல்லை என கூறும் ஓபிஎஸ் அதிமுக தலைமை அலுவலகத்தில் புகுந்து பொருட்களை சேதப்படுத்தியது ஏன். ஆறுகுட்டி போல் எந்த குட்டியும் எங்கும் செல்லவில்லை எல்லா குட்டிகளும் எங்களிடம் தான் உள்ளனர்

எட்டு வழிச்சாலை
எட்டு வழிச்சாலை பணிக்கு யார் ஆட்சியில் இருந்தாலும் நிலத்தை கையகப்படுத்திதான் சாலை அமைக்க வேண்டும். மாற்றுப்பாதை வழியாக சாலை அமைக்க வேண்டும் என்பது சாத்தியமில்லை. இந்த திட்டம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி இல்லாத போது ஒரு பேச்சையும் ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு பேச்சைம் பேசி வருகிறார்.

பாஜக தலையீடு இல்லை
மாற்றி பேசுவது தான் திமுகவின் திராவிட மாடல். அதிமுக ஆட்சியில் தமிழகத்துக்கு பத்தாயிரம் கோடியில் வர இருந்த எட்டு வழிச்சாலை திட்டத்தை திமுக தடுத்து நிறுத்திவிட்டு தற்போது அந்தத் திட்டம் வருவதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என தெரிவிக்கின்றனர். அதிமுக விவகாரத்தில் பாஜகவின் தலையீடு இல்லை.

திட்டங்களை புறக்கணிக்காதீர்கள்
திருச்சி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களின் நிலத்தடி நீர், நீர் மேலாண்மை மற்றும் விவசாய தேவைக்காக அதிமுக ஆட்சியில் ரூ.14,000 கோடியில் கொண்டுவரப்பட்ட காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்தை முடங்கிக் கிடப்பது வருத்தம் அளிக்கிறது. எங்கள் மீது கோபம் இருந்தால் காட்டலாம் மக்களுக்கு கொண்டு வந்த திட்டங்களை புறக்கணிப்பது நியாயம் இல்லை.












Click it and Unblock the Notifications