திருச்சியில் கைதான "மாஸ்டர் மைண்ட்.." சுற்றி வளைத்து அதிரடியாக தூக்கிய உபி போலீஸ்! என்ன நடந்தது?
திருச்சி: கடந்த வாரம் உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் தொழிலாளர் போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது. ஊதிய உயர்வை வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் வெடித்த வன்முறையால் அங்கு மோசமான ஒரு சூழல் உருவானது. இது தொடர்பான வழக்கில் திருச்சியில் பதுங்கி இருந்த முக்கிய குற்றவாளியை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
தேசிய தலைநகர் பகுதிக்கு உட்பட நொய்டா, உத்தரப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது. நாட்டில் அதிக தொழிற்சாலைகளைக் கொண்ட பகுதிகளில் ஒன்றாக நொய்டா இருக்கிறது. தொழிற்சாலை ஹப் ஆக உள்ள நொய்டாவின் ஃபேஸ்-2 மற்றும் செக்டார் 63 உட்படப் பல இடங்களில் கடந்த வாரம் திடீரென போராட்டம் வெடித்தது.

வெடித்த வன்முறை
ஊதிய உயர்வை வலியுறுத்தி நடந்த இந்த போராட்டம் முதலில் அமைதியாகவே நடந்தது. இருப்பினும், திடீரென அதில் வன்முறை வெடித்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே இந்த நொய்டா தொழிலாளர் போராட்டத்தின் போது வன்முறையைத் தூண்டிய வழக்கின் முக்கியக் குற்றவாளி, சினிமா பாணியில் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டின் திருச்சியில் பதுங்கி இருந்த அவரை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.
நொய்டா கௌதம் புத் நகர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற தொழிலாளர் போராட்டத்தின் போது பெரும் வன்முறை வெடித்தது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், வன்முறைச் சம்பவங்களுக்கு மூளையாகச் செயல்பட்டவர் ஆதித்யா ஆனந்த் என்பது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த இவரைப் பிடிக்க நொய்டா போலீசார் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இவரைப் பற்றித் தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசும் அறிவிக்கப்பட்டிருந்தது.
திருச்சியில் பதுங்கல்
பல்வேறு மாநிலங்களில் இவரைத் தேடி வந்த போலீசாருக்கு, ஆதித்யா ஆனந்த் தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து திருச்சி ரயில் நிலையத்தில் வைத்து போலீசார் அவரை மடக்கிப் பிடித்தனர். அவர் மீது பிணையில் வர முடியாத வாரண்ட் இருந்த நிலையில், ரயில்வே நிலையத்தில் வைத்து அதிரடியாக போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த கைது நடவடிக்கை முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
கைது
தொழிலாளர் போராட்டங்களைத் தவறாக வழிநடத்தியது, வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியது மற்றும் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தது என ஆதித்யா ஆனந்த் மீது நொய்டா ஃபேஸ்-2 போலீசார் வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். தற்போது கைது செய்யப்பட்டுள்ள அவரை, அடுத்தகட்டமாக நொய்டாவுக்கு அழைத்துச் சென்று சட்டப்படி நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.
நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடும் தொழிலாளர்களின் போராட்டத்தில் வன்முறையைத் தூண்டுவது என்பது யாருக்கும் நன்மையைப் பெற்றுத் தராது. போராடும் தொழிலாளர்களுக்கும் கூட இது உதவாது.. ஆதித்யா ஆனந்த்திடம் போலீசார் அடுத்த கட்ட விசாரணையை நடத்தவுள்ளனர். இந்தச் சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தவுள்ளனர்.
காரணம்
நொய்டா பகுதி உபி மாநிலத்தில் வரும் என்பதை முன்பே பார்த்தோம். இதன் அண்டை மாநிலமான ஹரியானாவில் தொழிலாளர்களுக்கு 35% சம்பள உயர்வை அம்மாநில அரசு அறிவித்தது. ஹரியானாவில் சம்பளம் உயரும்போது, தங்களுக்கு மட்டும் ஏன் குறைவான சம்பளம்? என்பதுதான் நொய்டா தொழிலாளர்களின் கேள்வி! அதை வைத்தே போராட்டங்கள் வெடித்தன.














Click it and Unblock the Notifications