‛ஸ்டன்’ ஆன ஸ்டாலின்.. விண்ணை தொட்ட ‛மோடி.. மோடி’ கோஷம்.. பிரதமர் காட்டிய சைகையால் ட்விஸ்ட்
திருச்சி: திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று பங்கேற்று பேசினார். இந்த வேளையில் முதல்வர் ஸ்டாலின் பேசியபோது ‛‛மோடி.. மோடி..'' என பாஜகவினர் கோஷமிட்ட நிலையில் மேடையில் இருந்து பிரதமர் மோடி காட்டிய சைகையால் அடுத்த சில நொடிகளில் அங்குள்ள நிலைமை மாறிப்போன சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
பிரதமர் நரேந்திர மோடி இன்று ஒருநாள் பயணமாக தமிழ்நாட்டின் திருச்சிக்கு வந்தார். காலை 10.15 மணிக்கு திருச்சி விமான நிலையத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வந்திறங்கினார். ஆளுநர் ஆர்என் ரவி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் அவரை வரவேற்றார்.

அதன்பிறகு பிரதமர் நரேந்திர மோடி திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார். இதையடுத்து ரூ1,100 கோடியிலான திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மேலும் ரூ20,140 கோடி மதிப்பிலான 20 திட்டங்களையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
திருச்சி புதிய விமான முனையம் திறப்பு நிகழ்ச்சி திருச்சி விமான நிலையத்தில் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடியுடன், மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய இணையமைச்சர் எல் முருகன், ஆளுநர் ஆர்என் ரவி, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் நேரு, எவ வேலு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
இந்த விழாவில் மத்திய இணையமைச்சர் எல் முருகன் வரவேற்புரை நிகழ்த்தினார். அதன்பிறகு மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா திருச்சி புதிய விமான முனையம் பற்றி எடுத்துரைத்தார். இதையடுத்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பேச அழைக்கப்பட்டார். அவர் மேடையில் தான் அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து எழுந்து மைக் அருகே வந்து நின்றார்.
முதல்வர் ஸ்டாலின் பேச எழுந்ததுமே நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜகவினர், ‛‛மோடி.. மோடி..'' என இடைவிடாது கோஷமிட்டனர். இந்த கோஷம் அரங்கத்தை அதிர வைத்தது. இதனால் முதல்வர் ஸ்டாலின் சில வினாடிகள் அப்படியே மைக் முன்பு பேசாமல் நின்றார். அதன்பிறகு ஸ்டாலின் பேச தொடங்கினார். அப்போதும் ’மோடி.. மோடி..’ என்ற கோஷம் தொடர்ந்து ஒலித்தது. இதனால் ஸ்டாலின் பேசுவது சரியாக கேட்காத நிலை ஏற்பட்டது.
இதனை கவனித்த பிரதமர் மோடி மேடையில் தான் அமர்ந்திருந்த இருக்கையில் இருந்தபடியே கோஷத்தை நிறுத்தும்படி தனது கையை அசைத்து சைகை செய்தார். இதையடுத்து படிப்படியாக ‛‛மோடி.. மோடி'' கோஷம் நின்றது. அதன்பிறகு ஸ்டாலின் பேச்சு தெளிவாக கேட்டது.
அதன்பிறகு தமிழகத்தின் பெருமை பற்றி முதல்வர் ஸ்டாலின் பேசும்போது நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுகவினர் ‛‛ஸ்டாலின்.. ஸ்டாலின்..'' என கோஷமிட்டனர். இதையடுத்து மீண்டும் பாஜகவினர் ‛மோடி.. மோடி'' என கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications