அடேய்.. நீங்க விளையாட கொரோனாதான் கிடைச்சதா? விராலிமலையில் 2 பேரை தூக்கியது போலீஸ்
திருச்சி: விராலிமலை அருகே தனியார் நிறுவன ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக வாட்ஸ் அப்பில் அவதூறு பரப்பிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
விராலிமலை தாலுகா அகரப்பட்டி கிராமம் லஞ்சமேட்டைச் சேர்ந்தவர் ராமன் மகன் அழகர்சாமி(30). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் சப்ளையராக வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 17-ம்தேதி மாலை லஞ்சமேடு பஸ் ஸ்டாப் அருகே நின்றுகொண்டிருந்தபோது அடைக்கன் மகன் முத்துக்குமார் என்பவர் அழகர்சாமியிடம் நீ கொரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மணப்பாறை மருத்துவமனையில் இருப்பதாக உன் கம்பெனியில் வேலை பார்க்கும் சின்னக்கவுண்டர் மகன் ஐயப்பன்(26) நேதாஜி நண்பர் குழு என்ற வாட்சப்பில் வீடியோ வெளியிட்டிருப்பதாக கூறியுள்ளார்.
இதைக்கேட்டு அழகர்சாமி முத்துகுமாரின் செல்போனை வாங்கி பார்த்தபோது அதில் அவரது புகைப்படத்துடன் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்பதுபோல வீடியோ இருப்பதைக்கண்டு அதிர்ந்து போனார். இதுகுறித்து ஐயப்பனிடம் அவர் கேட்டபோது அவர் நம் கம்பெனியில் வேலை பார்க்கும் சின்னையா மகன் ராஜ்குமார்(21) என்பவர்தான் எனக்கு அனுப்பியதாகவும் அதைத்தான் நான் வாட்சாப் குழுவில் போட்டதாகவும்கூறியுள்ளார்.
இதனையடுத்து இச்சம்பவம் குறித்து அழகர்சாமி விராலிமலை காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்தன்பேரில் போலீசார் ஐயப்பன்,ராஜ்குமார் ஆகிய இருவர் மீதும் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications