வாயோடு வாய் வைத்து.. மூச்சு தந்து.. போகவிருந்த உயிரை இழுத்துப் பிடித்து அசத்திய... போலீஸ்காரர்!
விபத்தில் காயமடைந்த முதியவருக்கு போலீஸ்காரர் முதலுதவி தந்துள்ளார்
திருச்சி: கடைசி நொடி அது.. போகிற உயிரை இழுத்து பிடித்து நிறுத்தி, பெரியவரை காப்பாற்றி உள்ளார் போலீஸ்காரர் ஒருவர். வாயோடு வாய் வைத்து.. மூச்சு தந்து.. காப்பாற்றிய இந்த வீடியோதான் வைரலாகி வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு வண்ணாங்கோவில் பகுதியில் முதியவர் ஒருவர் பைக்கில் மனைவி, பேரனை அழைத்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஜீப் ஒன்றில் மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் அந்த பெரியவர் கீழே விழுந்துவிட்டார்.. உடலில் அசைவு எதுவுமில்லை.. இதனால் இதை பார்த்து அவரது உறவினர்களும், பொதுமக்களும் பதற்றமாயினர்.. பெரியவர் இறந்துவிட்டார் என்றே நினைத்து கதறினர்.. அந்த சமயத்தில்தான் ராம்ஜிநகர் போலீஸ்காரர் பிரபு என்பவர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
கதறி கொண்டிருந்த கூட்டத்தை பார்த்ததும் உள்ளே புகுந்து பெரியவரின் நாடியை பிடித்து பார்த்தார். உயிர் இருப்பதை தெரிந்து, உடனடியாக முதலுதவி தர தயார் ஆனார்.. அதன்படி அந்த பெரியவருக்கு சுவாசம் வரவழைக்க முயற்சி செய்தார்.
அவரது நெஞ்சு பகுதியில் கை வைத்து அழுத்தம் தந்தார்.. பிறகு வாயோடு வாய் வைத்து தனது சுவாசத்தை அந்த பெரியவருக்கு தந்தார்.. உடனே பெரியவரும் கண் விழித்து கொண்டார்.. அவரை தூக்கி உட்கார வைத்தபிறகுதான் சுற்றியிருந்தவர்களுக்கு இப்போதுதான் நிம்மதியே வந்தது.
கூட்டத்தில் இருந்த ஒருவர் இதனை வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவில் போட்டுவிடவும், அது இப்போது வைரலாகி வருகிறது. உயிர் போகிற கடைசி நேர வினாடியில் போலீஸ்காரர் தந்த முதலுதவி பெரும் பாராட்டை பெற்று வருகிறது. மக்கள் மனசார பிரபுவை பாராட்டி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications