பிரதமர் மோடி வருகை! திருச்சியில் போக்குவரத்து மாற்றம்.. வாகன ஓட்டிகளே நோட் பண்ணிக்கோங்க
திருச்சி: திருச்சியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விமான நிலைய முனையத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று திருச்சி வருகிறார். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு திருச்சியில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகிறார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை 10 மணியளவில் பிரதமர் மோடி திருச்சிக்கு வருகை தருகிறார். அங்கிருந்து கார் மூலம் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார். பின்னர் விமான நிலையம் வந்து புதிய முனையத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

மத்திய அரசின் சார்பில் தொடங்க உள்ள பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். ரயில்வே, மற்றும் சாலை திட்ட பணிகளுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். மதுரை - தூத்துக்குடி இடையே 160 கி.மீ தூரத்திற்கு இரட்டை ரயில் பாதை திட்டத்திற்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். இதேபோல் திருச்சி - மானாமதுரை - விருதுநகர் ரயில் பாதையினை மின்மயமாக்கும் திட்டத்திற்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
இதேபோல் சேலம் - ஓமலூர் - மேட்டூர் அணைப்பகுதி வரை இரட்டை ரயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். சேலம் - வாணியம்பாடி வரை 44 கிமீ தூரத்திற்கு 4 வழிச்சாலைகள் அமைப்பதற்கான திட்டத்திற்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். பிரதமர் பங்கேற்கு நிகழ்ச்சிகளில் ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் மு க ஸ்டாலின் ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு திருச்சியில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பிரதமர் மோடி மற்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்பதால் தலைவர்களை வரவேற்க பாஜக மற்றும் திமுகவினர் தங்கள் கட்சிக் கொடிகளை வழிநெடுக கட்டியுள்ளனர். அத்துடன் பிரம்மாண்ட வளைவுகள், கட் அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் திருச்சி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
இதற்கிடையே, பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு திருச்சியில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருச்சி விமான நிலையம் வழியாக செல்லும் அனைத்து கனரக வாகனங்களின் வழியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் திருச்சி பேருந்து நிலையத்தில் இருந்து புதுக்கோட்டை செல்லும் வழியிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பாரதிதாசன் பல்கலைக்கழகம் செல்லும் கட்சியினர் வாகனங்கள் கும்பக்குடி வழியாக செல்ல போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். பிரதமர் வருகையையொட்டி பாஜகவினரின் வாகனங்கள் காலை 9 மணி வரை மட்டும் அனுமதி அளிக்கப்படும் எனவும் போலீசார் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications