கொட்டும் மழையில் டமால் டுமீல்.. ஸ்வீட் சாப்பிட்டு ... திருச்சியை தெறிக்க விட்ட ரஜினி ரசிகர்கள்!
நடிகர் ரஜினி கட்சி தொடங்கப்படும் என தெரிவித்த பின் ரசிகர்கள் திருச்சியில் கொட்டும் மழையில் வெடி வெடித்து இனிப்பு வழங்கி ரசிகர்கள் கொண்டாடினர்.
திருச்சி: ஜனவரியில் கட்சி தொடங்கப் போவதாக ரஜினிகாந்த் அறிவித்துள்ளது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்ட ரஜினி ரசிகர்கள் கொட்டும் மழையில் வெடி வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். வருங்கால முதல்வர் ரஜினி வாழ்க என்ற உற்சாக முழக்கமிட்டனர்.
நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பாரா? இல்லையா? என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அனைத்து மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார். தனது அரசியல் நிலைப்பாடு பற்றி விரைவில் அறிவிப்பேன் என்று கூறியிருந்தார் ரஜினிகாந்த். வழக்கம் போல ரஜினிகாந்த் ரசிகர்களை ஏமாற்றி விட்டார் என்று பலரும் பேசிய நிலையில் இன்று திடீரென்று தனது ட்விட்டர் பக்கத்தில் வரும் டிசம்பர் 31 ஆம் தேதி கட்சி அறிவிப்பு குறித்து ஜனவரி மாதம் தேதியை வெளியிடப்படும் என அறிவித்திருந்தார்.
வெல்கம் ரஜினி சார்.. வி ஆர் வெயிட்டிங்..எங்களுக்கே ஆதாயம்.. சொடக்கு போட்டு சவால் விடும் நாம் தமிழர்!
செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், தமிழகத்தில் அரசியல் மாற்றம் வந்தாகணும். எல்லாத்தையும் மாத்துவோம். எல்லோருக்கும் தலையெழுத்து இருக்கும். அதே போல, தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாத்த வேண்டிய நேரம் வந்து விட்டது. எல்லோரும் சேர்ந்து மாத்துவோம். இப்ப இல்லேன்னா எப்பவும் இல்லே என்று கூறினார்.
இதனால் தமிழகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்கள் உற்சாகத்துடன் வெடி வெடித்து கொண்டாடி வருகின்றனர். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதியாகி விட்டது என்ற நிலையில் திருச்சி மாவட்ட ரஜினி ரசிகர்கள் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு கொட்டும் மழையில் பட்டாசு வைத்து உற்சாகமாக தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அப்பகுதியில் வந்த வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்புகளை வழங்கி ரஜினியின் புகைப்படத்தை வைத்து தமிழக முதல்வர் ரஜினிகாந்த் வாழ்க என்று உற்சாக முழக்கமிட்டனர்.