ஊழல்வாதிகள் சிறை சென்றாலும் ஷாப்பிங் போகும் அளவிற்கு வசதியாக உள்ளனர் - சசியை போட்டு தாக்கும் கமல்
ஊழல் செய்தவர்கள் ஜெயிலுக்கு சென்றாலும் ஷாப்பிங் செய்யும் அளவிற்கு வசதியாக உள்ளனர் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.
திருச்சி: அரசியலுக்கு வந்ததால் ரூ.300 கோடி வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ஊழல் செய்தவர்கள் ஜெயிலுக்கு சென்றாலும் ஷாப்பிங் செய்யும் அளவிற்கு வசதியாக உள்ளனர் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் சார்பாக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் செய்து வருகிறார்.
டெல்டா மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் செய்து வரும் கமல்ஹாசன், அரசியல் விளையாட்டுக்கு வந்ததால் ரூ.300 கோடி வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஆனால், அதைப்பற்றி எனக்கு கவலையில்லை என்றும் ஊழல் செய்தவர்கள் ஜெயிலுக்கு சென்றாலும் ஷாப்பிங் செய்யும் அளவிற்கு வசதியாக உள்ளனர் என்றும் விமர்சித்தார்.

பிக்பாஸ் ஸ்டைல்
திருவெறும்பூர் சட்டசபைத் தொகுதியில் பேசிய கமல்ஹாசன், திருவெறும்பூர் மநீம வேட்பாளர் அறிவித்து வழங்கிய 25 உறுதிமொழி பத்திரம் துணிச்சலான பிரகடனம் ஆகும். இது நேர்மையானவர்களால் மட்டும்தான் உருவாக்க முடியும். இந்த உறுதிமொழிகளை எழுதி கொடுத்து விட்டால் மக்களிடம் இருந்து ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது.

கடமை தவறிய அரசு
நாங்கள் அதை அனைத்தையும் செய்து காட்டுவோம் என்ற நம்பிக்கையில் தான் அடுத்த தேர்தல் பற்றியும் பேசுகிறோம்.
இதற்கு பெயர் திமிர் அல்ல, எங்களின் தன்னம்பிக்கை. சுத்தமான குடிநீர், மருத்துவம், கல்வியை கொடுக்க வேண்டியது அரசின் கடமை ஆனால் அதை அவர்கள் செய்ய தவறி விட்டார்கள்.

சாக்கடை பிரச்சினை
நான் 234 தொகுதிகளிலும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறேன். எந்த ஊருக்கு சென்றாலும் திறந்து இருக்கும் சாக்கடை, போக்குவரத்து நெரிசல் இருக்க தான் செய்கிறது. இங்கு அரியமங்கலம் குப்பை மேட்டால் உங்களுக்கு என்ன பெருமை இருக்கிறது.
குப்பையில் இருந்து கூட மின்சாரத்தை உருவாக்க முடியும்.

ஊழலில் ஊறிய அரசியல்வாதிகள்
எங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு அரசியலில் பயிற்சி இல்லாமல் இருக்கலாம். ஆனால் மக்களுக்கு சேவை செய்வதில் அதிக அனுபவம் இருக்கிறது. ஆனால் தமிழகத்தை ஆளும் இரு கட்சியினருக்குமே ஊழலை தவிர வேறு எதுவும் தெரியாது. மாறி, மாறி ஒருவருக்கொருவர் வேட்டு வைத்துக்கொள்கிறார்கள்.

பெண்களுக்கு ஊதியம்
இல்லத்தரசிகளுக்கு நான் ஊதியம் தருவேன் என்று கூறியபோது எல்லோரும் சிரித்தார்கள், பெத்த தாய்க்கே ஊதியம் கொடுப்பதா என்று. உயிரை கொடுத்தவர்களுக்கு ஊதியம் கொடுக்க கூடாதா? நம்முடைய தாய்மார்கள் முன்னேறினால் தான் நம்முடைய தலைமுறைகள் முன்னேற முடியும்.

ஏழ்மையை போக்குவோம்
ஒவ்வொரு தமிழனின் தலையிலும் அரசு ரூ.65 ஆயிரம் கடன் சுமையை ஏற்றியுள்ளது. ஒன்றை மட்டும் பொதுமக்கள் மனதில் வைத்து கொள்ளுங்கள், இலவசங்கள் எப்போதும் உங்கள் ஏழ்மையை போக்காது. அதை நம்பாதிருங்கள் உழைப்பு மட்டும் தான் உங்களின் ஏழ்மையை போக்கும்.

தமிழகத்தை மாற்றுவோம்
நம்முடைய கட்சி வேட்பாளர்கள் அனைவருமே பொதுமக்களுக்கு சேவை செய்வதற்காக காத்திருக்கிறார்கள். ஆகவே பொதுமக்கள் இந்த முறை எங்களுக்கு வாய்ப்பு தாருங்கள். தமிழகத்தையே மாற்றி காட்டுவோம். மக்களின் நீதி மலர வேண்டும் என்றால் அது மக்கள் நீதி மய்யத்தால் தான் முடியும். எங்கள் ஆட்சியின் கல்வி திட்டங்களின் படி மாணவ மாணவிகள் படிக்கும் போது தற்கொலைகள் நிகழாது. வருகிற ஏப்ரல் 6ஆம் தேதியை சரித்திர நாளாக மக்கள் மாற்றுங்கள்.












Click it and Unblock the Notifications