எம்.பி தேர்தலில் நான் போட்டியிடவே மாட்டேன்.. காரணம் வைகோ.. சீமான் வெளிப்படையாக சொன்ன விஷயம்!
திருச்சி: தான் ஏன் எம்.பி தேர்தலில் போட்டியிடுவதில்லை என்பதற்கான காரணத்தை விளக்கியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
நாம் தமிழர் கட்சி 2016ஆம் ஆண்டு முதல் தேர்தல்களில் போட்டியிட்டு வருகிறது. அதுவும், எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை என தனித்து ஒவ்வொரு தேர்தலிலும் களமிறங்கி வருகிறது நாதக. அந்த வகையில் வரும் மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 இடங்களிலும் தனித்துப் போட்டி என அறிவித்த சீமான், வேட்பாளர்களையும் அறிவித்தார்.

கடந்த 2016 முதல் தேர்தலில் போட்டியிட்டு வருகிறது நாம் தமிழர் கட்சி. 2016 சட்டசபை தேர்தலில் கடலூர் தொகுதியில் போட்டியிட்டார் சீமான். அந்த தேர்தலில் ஐந்தாவது இடம் பிடித்தார் சீமான். 2019 லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சி 40 இடங்களிலும் போட்டியிட்டது. ஆனால், சீமான் போட்டியிடவில்லை. 2021 சட்டசபை தேர்தலில் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்ட சீமான், மூன்றாமிடம் பிடித்தார். வரும் லோக்சபா தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என அறிவித்துள்ளார் சீமான்.
தேர்தல் பணிகளில் சீமான் தீவிரம்: சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீட்டையும் செயல்படுத்தி வருகிறார் சீமான். அந்த வகையில், இந்த லோக்சபா தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி சார்பில் 20 தொகுதிகளில் ஆண் வேட்பாளர்கள், 20 தொகுதிகளில் பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்படுகின்றனர்.
திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள், கூட்டணி பேச்சு, தொகுதிப் பங்கீடு என இழுபறிக்கிடையே தேர்தல் பணியாற்றி வரும் சூழலில், முதல் ஆளாக வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார் சீமான். இன்று நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் இடும்பாவனத்தில் நடக்கிறது.
கடந்த 2019 மக்களவைத் தேர்தல் மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட கரும்பு விவசாயி சின்னம் வரும் மக்களவைத் தேர்தலில், கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. கரும்பு விவசாயி சின்னத்தை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தங்களுக்கு வழங்கக் கோரி நாம் தமிழர் கட்சி தேர்தல் ஆணையத்தில் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
எம்.பி தேர்தலில் போட்டியிட மாட்டேன்.. இதுதான் காரணம்: இந்த நிலையில் இன்று திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. நான் இந்த மண்ணுக்கும் மக்களுக்குமான ஆள். எனது கட்சிப் பிரதிநிதிகள் தம்பி, தங்கைகள் டெல்லிக்குச் சென்று பேசுவார்கள். நான் இங்குதான் வேலை செய்ய வேண்டும். கடந்த காலங்களில் என் முன்னோர்கள் செய்த தவறுகள் எனக்கு படிப்பினையாக உள்ளது.
உதாரணமாக ஒன்று சொல்கிறேன். எனது அண்ணன் வைகோ இருக்கிறார். அவர் இந்திய நாடாளுமன்றத்தில் பேசிய இங்கு சட்டசபையில் பேசி இருந்தால் அவரை மிஞ்சும் தலைவரே இங்கு இல்லை. அவர் தொடர்ச்சியாக இங்கு கட்சி இருக்கும்போது எம்.பியாகி டெல்லிக்குச் சென்று பேசியதால், இங்கு கட்சி வளராமல் போய்விட்டது.
வைகோ கொடுத்த படிப்பினை: வைகோ மட்டும் சட்டசபைக்குள் பேசி இருந்தால்.. நீங்கள் கற்பனை செய்து பாருங்கள். அவரை மிஞ்சிய தலைவர் இங்கு இருக்க முடியாது. இதெல்லாம் நமக்கு ஒரு படிப்பினை. என் தம்பி, தங்கைகள் டெல்லிக்குப் போய் எப்படி பேசுகிறார்கள் என்று பாருங்கள்" என்று தெரிவித்தார் சீமான்.
மேலும், "நாங்கள் தனித்து போட்டி என்று அறிவித்துவிட்டோம். கூட்டணி அமைக்க சிலர் எங்களிடம் பேசினார்கள். ரகசியமாக பேசினார்கள், அதை வெளியில் சொல்வது மாண்பாக இருக்காது. கூட்டணி பேசியதை எங்கள் மன்னார்குடியில் கேட்டாக, மாயவரத்தில் கேட்டாக, மயிலாப்பூர்ல கேட்டாக என பொதுவெளியில் சொல்லிக்கொண்டா இருக்க முடியும்" என்றார் சீமான்.












Click it and Unblock the Notifications