சீமானுக்கு முளைத்த சிக்கல்.. 5 மணிக்குள்ள ஆஜராகனும்! இல்லைனா பிடிவாரண்ட்.. எச்சரித்த நீதிமன்றம்!
திருச்சி: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று மாலை 5 மணிக்குள் ஆஜராக திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சி டிஐஜி வருண்குமார் மற்றும் அவருடைய குடும்பத்தினரை அவதூறாக பேசியதாக வழக்கு தொடரப்பட்ட நிலையில், வழக்கில் இன்று ஆஜராகாத நிலையில் மாலை 5 மணிக்குள் ஆஜராக நீதிபதி பாலாஜி உத்தரவிட்டுள்ளார். இல்லையேல் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என நீதிபதி எச்சரித்துள்ளார்.
திருச்சி எஸ்பியாக இருந்த வருண்குமார், நாம் தமிழர் கட்சி பிரமுகரான சாட்டை துரைமுருகனை கைது செய்து சிறையில் அடைத்து திட்டமிட்டு பழிவாங்குவதாகவும், சீமான் புகார் கூறியிருந்தார். மேலும் குறிப்பிட்ட சில சாதியினரை சாதி வன்மத்துடன் எஸ்பி வருண்குமார் அணுகி வருவதாக சீமான் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார், புதுக்கோட்டை எஸ்பியும் வருண்குமாரின் மனைவியுமான வந்திதா பாண்டே ஆகியோரை சில எக்ஸ் கணக்குகளில் இருந்து ஆபாசமாகவும் தரக்குறைவாகவும் விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிடப்பட்டன.

தொடர்ந்து வருண்குமார் ஐபிஎஸ் தரப்பு சீமானுக்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில் அது தொடர்பாக 15 விளக்கத்தை சீமான் அளித்திருந்தார். ஆனால் தங்கள் கேள்விகள் எதற்கும் பதில் அளிக்கவில்லை எனக் கூறி வருண்குமார் திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் சீமான் மீது வழக்கு தொடர்ந்தார். மேலும், புகார் தொடர்பாக கடந்த ஜனவரி 30ஆம் தேதி திருச்சி நீதிமன்றத்தில் வருண்குமார் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
இதற்கிடையே வருண்குமார் ஐபிஎஸ் மற்றும் அவரது மனைவி வந்திதா பாண்டே ஐபிஎஸ் ஆகியோரை டிஐஜியாக பதவி உயர்வு செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. தற்போது வருண்குமார் திருச்சி ஐஜியாகவும், வந்திதா பாண்டே திண்டுக்கல் டிஐஜி ஆகவும் உள்ளார். இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக கடந்த 8ஆம் தேதி திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக வருண்குமார் ஆஜராகி தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார். இதனை குறித்துக் கொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்து இருந்தார்.
இந்நிலையில், டிஐஜி வருண்குமார் ஐபிஎஸ் தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணை இன்று திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. கடந்த முறையே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டார். ஆனால் சீமான் ஆஜராகவில்லை. இந்நிலையில் இன்று நடைபெற்ற விசாரணையின் போதும் சீமான் ஆஜராகவில்லை.
கடந்த பிப்ரவரி மாதம் முதல் சீமான் ஆஜராக வேண்டுமென நீதிபதி உத்தரவிட்ட நிலையில் அவர் ஆஜராகவில்லை. இந்த நிலையில் வருண்குமார் தரப்பு சாட்சியங்களிடம் இன்று விசாரணை நடைபெற்றது. அதில் புதுக்கோட்டையை சேர்ந்த மணிகண்டன் என்பவர் ஆஜராகி வருண்குமார் தரப்பில் சாட்சியம் அளித்தார். தொடர்ந்து வழக்கின் புகார்தாரரான அருண்குமார் தரப்பில் விசாரணைகள் முடிவடைந்தது.
இதை அடுத்து சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டும் இன்று ஆஜராகவில்லை. தொடர்ந்து வழக்கை விசாரித்த திருச்சி குற்றவியல் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி பாலாஜி, இன்று மாலை 5 மணிக்குள் நீதிமன்றத்தில் சீமான் ஆஜராக வேண்டும் இல்லை என்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications