Vijay: களத்துக்கே வராதவர் களத்தை பற்றி பேசுவதுதான் நகைச்சுவை! கருப்பு சிவப்பு உடையில் சீறிய சீமான்!
திருச்சி: களத்துக்கே வராதவர் களத்தை பற்றி பேசுவதுதான் நகைச்சுவை என விஜய் மீது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் விமர்சனங்களை முன் வைத்தார். ஈரோட்டில் விஜய் பொதுக் கூட்டத்தில் பேசிய போது சீமானை மறைமுகமாக சாடியதாக சொல்லப்பட்ட நிலையில் சீமான் கடும் விமர்சனம் செய்துள்ளார்.

திருச்சியில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், களத்தில் இருப்பவர்கள் குறித்து பேசுவோம். களத்தில் யார் இருக்கிறார்? கட்சி ஆரம்பித்து விக்கிரவாண்டி தொகுதி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்களில் தவெக போட்டியிடாதது ஏன்?
ஈரோட்டில் வந்து நிற்க வேண்டியதுதானே! திமுகவும் நாம் தமிழர் கட்சியும் தானே மோதியது. எல்லாரும் போய் விட்டார்கள். இந்தியாவை ஆளும் பாஜகவும் அந்த தேர்தலில் போட்டியிடவில்லையே! அதிமுக வரவில்லை, களத்துக்கே வராதவர் களத்தை பற்றி பேசுவதுதான் நகைச்சுவையாக இருக்கிறது.
திமுக ஒரு தீயசக்தினு விஜய்க்கு இப்போதுதான் தெரியுதா? என் தம்பி விஜய்க்கு ஒரே ஒரு எதிரிதான். ஆனால் எனக்கு 4 எதிரிங்க. திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக என 4 பேரோட நான் மல்லுக்கட்டி வருகிறேன்.
தம்பி விஜய் கட்சி இப்போதுதானே கட்சி ஆரம்பிச்சிருக்காரு. அதை தட்டிக் கொடுத்துதான் வளர்க்கணும், ஆனால் களத்துல நாங்கள் யாருன்னு இந்த 4 பேருக்கும் நல்லாவே தெரியும். எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி என மறைந்த தலைவர்களின் பெயர்களை சொல்லி இன்னும் எத்தனை காலம்தான் மக்களை ஏமாற்றுவீர்கள்?
கொள்கையை சொல்லி ஓட்டு கேட்பது நாங்கள் மட்டும்தான் போல! மற்றவர்கள் சின்னத்தை காட்டியும் பணத்தை காட்டியும்தான் ஓட்டு கேட்கிறார்கள். பணத்தை வாங்கிக் கொண்டு ஓட்டு போட்டால், அது நோட்டில் இருக்கும் காந்திக்கு போட்ட ஓட்டு!
கொரோனா காலத்தில் நர்ஸ்களை கடவுள், தேவதை என்று ஆளும் கட்சியினர் கொண்டாடினார்கள். இன்று அவர்கள் தெருவில் நின்று போராடும்போது கண்டுகொள்ள ஆளில்லை. பணி நிரந்தரம் செய்வோம் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு, இப்போது அவர்களைத் தூக்கி எறிவதுதான் திராவிட மாடல் ஆட்சியா?
ரூ 1000 மகளிர் உரிமைத் தொகையில் மக்கள் ஆடு, மாடு வாங்கிப் பெருகிவிட்டதாகச் சொல்வதெல்லாம் காதில் பூ சுற்றும் வேலை. பொய் சொல்வதற்கும் ஒரு அளவு இல்லையா?
19 ஆயிரம் கள்ள ஓட்டுகள் இருக்குனு அப்போதே மத்திய அமைச்சருக்கு தெரிந்திருக்கும் போது அந்த தேர்தல் முடிவை ரத்து செய்யாதது ஏன்? 4 வருடங்கள் சும்மா இருந்துவிட்டு 2026 ஆம்ஆண்டு தேர்தல் வரும் போது இதையெல்லாம் கையில் எடுப்பதா?
1 கோடி வாக்காளர் பெயர்கள் நீக்கம் என்பது சாதாரண பிழை திருத்தம் அல்ல. ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். தேர்தல் நெருங்கும் நேரத்தில், குறுகிய காலத்தில் மீண்டும் எப்படி 1 கோடி பேரை சேர்ப்பீர்கள்? வாக்காளர்கள் ஆட்சியாளர்களை தேர்வு செய்த காலம் போய் தற்போது ஆட்சியாளர்கள் வாக்காளர்களைத் தேர்வு செய்யும் அவல நிலை வந்துவிட்டது.
இலவச வேட்டி, சேலை கொடுப்பது என்பது ஆட்சியின் சாதனை அல்ல, அது மக்களின் வறுமையின் சாட்சி! தன் வீட்டுப் பண்டிகையை கூட சொந்த காசில் கொண்டாட முடியாத நிலையில் மக்கள் அவதியடைகிறார்கள். இவ்வாறு சீமான் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications