அடிப்படை 'டேஷ்’ இல்லாமல் பேசும் சீமான்..எந்த பிரயோஜனமும் இல்லை! வருண்குமார் ஐபிஎஸ்-ன் வக்கீல் அதிரடி
திருச்சி: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வருண்குமார் ஐபிஎஸ் இடையே கருத்து மோதல் வலுத்து வரும் நிலையில் இது தொடர்பாக தொடரப்பட்டுள்ள வழக்கில் இரண்டாவது முறையாக வருண் குமார் ஐபிஎஸ் ஆஜராகி நீதிபதி முன் விளக்கம் அளித்தார். இந்த நிலையில் சீமான் அடிப்படை ’டேஷ்’ இல்லாமல் பேசுவதாக டிஐஜி அருண்குமார் ஐபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் விமர்சித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியின் முக்கிய பிரமுகரான சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட் போது அவரது செல்போனில் பதிவு செய்யப்பட்டிருந்த சில ஆடியோக்கள் ’லீக்’ ஆனது. துரைமுருகனுடன் பேசிய சீமான், மூத்த முக்கிய நிர்வாகிகள் குறித்து அவதூறாக பேசியதாக சில ஆடியோக்கள் வெளியானது.

அதனை சீமானும் மறுக்கவில்லை. அதே நேரத்தில் திருச்சி எஸ்பி வருண்குமார் ஐபிஎஸ், சாட்டை துரைமுருகனின் செல்போன்களில் இருந்த ஆடியோக்களை எடுத்து கசிய விட்டதாக சீமான் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
வருண்குமார் ஐபிஎஸ்:
திருச்சி எஸ்பியாக இருந்த வருண்குமார், நாம் தமிழர் கட்சி பிரமுகரான சாட்டை துரைமுருகனை கைது செய்து சிறையில் அடைத்து திட்டமிட்டு பழிவாங்குவதாகவும், சீமான் புகார் கூறியிருந்தார். மேலும் குறிப்பிட்ட சில சாதியினரை சாதி வன்மத்துடன் எஸ்பி வருண்குமார் அணுகி வருவதாக சீமான் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார், புதுக்கோட்டை எஸ்பியும் வருண்குமாரின் மனைவியுமான வந்திதா பாண்டே ஆகியோரை சில எக்ஸ் கணக்குகளில் இருந்து ஆபாசமாகவும் தரக்குறைவாகவும் விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிடப்பட்டன.
நாம் தமிழர் சீமான்:
தொடர்ந்து வருண்குமார் ஐபிஎஸ் தரப்பு சீமானுக்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில் அது தொடர்பாக 15 விளக்கத்தை சீமான் அளித்திருந்தார். ஆனால் தங்கள் கேள்விகள் எதற்கும் பதில் அளிக்கவில்லை எனக் கூறி வருண்குமார் திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் சீமான் மீது வழக்கு தொடர்ந்தார். மேலும், புகார் தொடர்பாக கடந்த 30ஆம் தேதி திருச்சி நீதிமன்றத்தில் வருண்குமார் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
பதவி உயர்வு:
இதற்கிடையே வருண்குமார் ஐபிஎஸ் மற்றும் அவரது மனைவி வந்திதா பாண்டே ஆகியோரை டிஐஜியாக பதவி உயர்வு செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக வருண்குமார் ஆஜராகி தனது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார்.
வழக்கறிஞர் பேட்டி:
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வருண்குமார் ஐபிஎஸ்-ன் வழக்கறிஞரான முரளி கிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,” நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது சீமான் மீண்டும் மீண்டும் டிஐஜி வருண்குமார் குறித்து கீழ்த்தரமான முறையில் பேசி வருகிறார். ஐபிஎஸ் என்பது நாட்டின் மிக உயர்ந்த பதவிகளில் ஒன்று. அதை சாதாரண பதவி போல சீமான் விமர்சிக்கிறார். ஐபிஎஸ் படிப்பை பற்றி விமர்சிக்க சீமானுக்கு என்ன கல்வி தகுதி இருக்கிறது. மனநலம் பாதிக்கப்பட்ட நபர் போல சீமான் பேச்சுக்கள் உள்ளது. அடிப்படை ’டேஷ்’ அறிவு இல்லாமல் பேசும் சீமானுக்கு எவ்வளவு பதில் சொன்னாலும் பிரயோஜனமில்லை” என்றார்.
வார்த்தைப் போர்:
கடந்த முறை வழக்கு விசாரணைக்கு ஆஜரான போது தன்னிடம் தொழில் அதிபர் ஒருவர் மூலம் மன்னிப்பு கேட்பதாக சீமான் கேட்டதாக வருண்குமார் ஐபிஎஸ் கூறியிருந்தார். அதற்கு வருண்குமார் அரசியல் கட்சித் தலைவர் மாதிரி பேட்டி கொடுக்கிறார், மாவட்ட செயலாளர் பதவி வாங்கி கட்சியில் சேர்ந்து விட வேண்டியது தானே” என சீமான் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications