திருச்சி மக்களே.. வருகிறது சித்த மருத்துவக் கல்லூரி... அமைச்சர் கே.என். நேரு உறுதி
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் தமிழக அரசு சார்பில் சித்த மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் என நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு திருச்சியில் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவ முகாமை தொடங்கி வைத்தபின் அமைச்சர் கே.என்.நேரு இதை தெரிவித்தார்.
புதிய சித்தா மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான அறிவிப்பு வருகின்ற சட்டமன்ற கூட்டத் தொடரில் வெளியிடப்படும் எனவும் அமைச்சர் கே.என். நேரு செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் இந்து கடவுள் சிலை உடைப்பு.. போராட்டத்தில் குதித்த மக்கள்
சித்த, ஆயூர்வேத படிப்புகள்
இயற்கை முறை வைத்திய படிப்புகளைப் பொருத்தவரை, அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனையில் சித்தா படிப்புகளுக்கு 60 இடங்கள், யுனானி 60 இடங்கள், யோகா மற்றும் இயற்கை மருத்துவம் 60 இடங்கள் உள்ளன. பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரியில் 100 இடங்கள், மதுரை திருமங்கலம் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் 50 இடங்கள், நாகர்கோவில், கோட்டாறில் உள்ள ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் 60 இடங்கள் என 6 அரசு கல்லூரிகளில் மொத்தம் 390 இடங்கள் உள்ளன. இதேபோல 27 தனியார் கல்லூரிகளிலும் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு சுமார் 1,200 இடங்கள் உள்ளன. எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட அலோபதி மருத்துவப் படிப்புகளை போலவே சித்தா, ஹோமியோபதி, யுனானி, ஆயுர்வேதம் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.
கல்வித் தகுதி
அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் BSMS (சித்தா), BAMS (ஆயூர் வேதா) , BUMS (யுனானி) , BHMS (ஹோமியோபதி) படிப்புகள் படிக்க அரசு கவுன்சிலிங் நடத்தி வருகின்றது. கல்வித் தகுதி 12ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது விலங்கியல் மற்றும் தாவரவியல் படித்து, குறைந்தது 50 % மதிப்பெண் எடுத்து இருக்க வேண்டும். சித்தா படிக்க 10 அல்லது 12ஆம் வகுப்புகளில் தமிழ் மீடியம் படித்து இருக்க வேண்டும் அல்லது தமிழை ஒரு மொழி பாடமாக 10வது வரை படித்திருக்க வேண்டும். யூனானி படிக்க 10 அல்லது 12ஆம் வகுப்புகளில் உருது மீடியம் படித்து இருக்க வேண்டும், அல்லது உருதை ஒரு மொழி பாடமாக 10வது வரை படித்திருக்க வேண்டும்.
திருச்சி மாவட்டத்தில் புதிய சித்தா கல்லூரி
இந்நிலையில் திருச்சியில் உள்ள மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவ முகாம் தொடங்கியது. சித்த மருத்துவமனை வளாகத்தில் 5வது தேசிய சித்த மருத்துவ தின கண்காட்சியில் பங்கேற்று சித்த மருத்துவ முகாமை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்தபின் பேசிய அமைச்சர் கே.என் நேரு திருச்சி மாவட்டத்தில் புதிய சித்த மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கைகள் வருகிறது. எனவே வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரையிலேயே அதற்கான அறிவிப்பை வெளியிட முயற்சி செய்வோம். அல்லது சட்டமன்றக் கூட்டத்தொடரில் மருத்துவ துறைக்கான மானிய கோரிக்கையில் சித்த மருத்துவக் கல்லூரிக்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.
நோய்களை தீர்க்கிறது சித்த மருத்துவம்
மேலும் சித்த மருத்துவம் பல்வேறு நோய்களுக்கு நிரந்தர தீர்வாக இருக்கிறது. அதனால்தான் பேராசிரியர் க.அன்பழகன், வீராச்சாமி போன்றவர்கள் சித்த மருத்துவத்தை மட்டும் கடைப்பிடித்தனர் என தெரிவித்தார். இதையடுயத்து விவசாயம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு மழை உரிய பருவக்காலத்தில் பெய்யாததால் நோய் எதிர்ப்பு சக்திகளை உருவாக்கும் தினை, கம்பு உள்ளிட்டவற்றை விவசாயிகளால் விளைவிக்க முடியவில்லை என தெரிவித்தார். அமைச்சர் கே.என்.நேருவால் தொடங்கி வைக்கப்பட்ட கண்காட்சி மற்றும் சித்த மருத்துவ முகாம் மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் சித்த மருத்துவத்தில் உள்ள மருத்துவ பொருட்கள் அதனால் கிடைக்கும் பயன்கள், அரசு மருத்துவமனையில் அளிக்கப்படும் சித்த மருத்துவ சிகிச்சைகள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த முகாம் திறப்பு நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, மத்திய மண்டல காவல் துறை தலைவர் பாலகிருஷ்ணன், அரசு மருத்துவமனை டீன் வனிதா, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.