தமிழகத்தில் 4 லாக்அப் டெத்..! போலீசாருக்கு வர்ம கலை பயிற்சி! தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தகவல்..!
திருச்சி : தமிழகத்தில் சென்ற ஆண்டு 4 பேர் காவல் நிலைய மரணமடைந்துள்ளனர் எனவும், காவல் நிலையத்தில் காவலர்கள் தாக்கியதால் மட்டுமே குற்றவாளிகள் இறந்தார்கள் என்று சொல்லமுடியாது என தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திர பாபு கூறியுள்ளார்.
தமிழ்நாடு ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் அமைப்பு மற்றும் தமிழ்நாடு காவல் துறையின் சார்பில் திருச்சியில் காவல் நிலைய மரணங்கள் தடுப்பு என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.
தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திர பாபு தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஒரு வருடத்தில் குற்றங்கள் குறைந்துள்ளது! போலீசார் மன அழுத்தத்தை குறைக்க யோகா - டிஜிபி சைலேந்திர பாபு
டிஜிபி சைலேந்திரபாபு
நிகழ்ச்சியில் பேசிய தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு காவல் நிலைய மரணங்களை தடுப்பது தொடர்பாக திருச்சியில் மட்டுமல்லாது தொடர்ந்து பல இடங்களில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தப்பட உள்ளது. காவல் நிலைய மரணத்தை தடுப்பது பற்றி மத்திய மண்டல காவல் துறையினருக்கு அறிவுரை தரப்பட்டுள்ளது. காவல்நிலைய மரணங்கள் கூடாது. காவல்துறை வன்முறையை கையாளக் கூடாது என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
போலீசாருக்கு வர்ம கலை
தேவைப்படும்போது பலத்தை காவல்துறை பயன்படுத்தலாம். குற்றவாளிகள் காவல்துறையை பார்த்து பயப்பட கூடாது. மக்கள் தாக்கினால் தற்காத்துக்கொள்ள காவல்துறைக்கு காரத்தே, வர்ம கலைகள் கற்றுத் தரப்படவுள்ளன" என பேசினார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், " காவல் நிலைய மரணங்களை தடுப்பது தொடர்பாக ஒரு நாள் கருத்தரங்கம் இன்று நடந்து வருகிறது. திருச்சியில் 350 பேர் பயிற்சி எடுக்க உள்ளனர் . 919 காவல் நிலைய மரணங்கள் இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் நிகழ்ந்துள்ளது. தமிழகத்தில் 10 ஆண்டுகளில் 84 காவல் நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளது.
காவல் நிலைய மரணம்
தமிழகத்தில் சென்ற ஆண்டு 4 பேர் காவல் நிலைய மரணமடைந்துள்ளனர். காவல் நிலையங்களில் காவலர்கள் மீது தாக்குதல் நடத்தும்போது அவர்களை லத்தியால் தாக்காமல் எப்படி விலங்கு போடுவது என்பது குறித்த பயிற்சி தரப்பட உள்ளது. காவல் நிலையங்களில் குற்றவாளிகள் காவலர்களை தாக்கும் போது அதை எப்படி எதிர்கொள்வது என்பதற்கான பயிற்சிகளையும் வழங்கவுள்ளோம். காவல் நிலையத்தில் காவலர்கள் தாக்கியதால் மட்டுமே குற்றவாளிகள் இறந்தார்கள் என்று சொல்லமுடியாது.
கைதிகள் தற்கொலை
உடல்நிலை சரியில்லாமல் கூட சிலர் இறந்து விடுகிறார்கள். அதேபோல சிலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதனால் தான் அதிக மரணங்கள் ஏற்படுகிறது. காவலர்கள் குற்றவாளிகளை கண்ணியமாகவும் பாதுகாப்பாகவும் நடத்த வேண்டும் என்பதற்குத்தான் இந்த கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. லாக் அப் மரணமே இல்லை என்ற நிலையை உருவாக்குவதே இந்த பயிற்சியின் நோக்கம்" என டிஜிபி சைலேந்திர பாபு கூறினார்.