இனி நம்ம போற பாதை சிங்கப் பாதை.. ராக்கெட் வேகத்தில் முன்னேறுவோம்.. திருச்சியில் மு.க.ஸ்டாலின் உறுதி!
திருச்சி: இனி நாம் போகும் பாதை சிங்கப்பாதையாக இருக்கும் என்று திருச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி கொடுத்துள்ளார். அதிமுக ஆட்சியில் நடந்த அவலங்களை பட்டியலிட்ட மு.க.ஸ்டாலின், வரும் காலத்தில் ராக்கெட் வேகத்தில் வளர்ச்சியை பார்ப்பீர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் ரூ.408 கோடி மதிப்பில் பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து 50 ஆயிரம் பேருந்து இலவச வீட்டுமனை பட்டா வழங்கியதோடு, ரூ.463.30 கோடி மதிப்பில் நிறைவுற்ற பணிகளை திறந்து வைத்தார். இதன்பின் ரூ.830.35 கோடியின் அரசு நலத்திட்ட உதவிகளை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

மு.க.ஸ்டாலின் பேச்சு
இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், 2021ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக திருச்சியில் நடந்த விடியலுக்கான மாநாட்டில் அடுத்த 10 ஆண்டுகளுக்கான கொள்கையை அறிவித்தோம். தமிழ்நாட்டை துறை வாரியாக முன்னேற்றுவதற்கு 7 வாக்குறுதிகளை அறிவித்தேன்.
தமிழ்நாடு நம்பர் 1
வாழ்க்கைத் தரம், கட்டமைப்பு, கல்வி, தண்ணீர், அனைவருக்கும் அனைத்துமான தமிழக என்று 7 வாக்குறுதிகளை அளித்தோம். இதில் 7 வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை 4 ஆண்டுகளில் எட்டியுள்ளோம். பொருளாதாரத்தை பொறுத்தவரை 9.69 விழுக்காடு வளர்ச்சி. இதுவரை தமிழ்நாடு பார்த்திடாத வளர்ச்சி இதுவாகும். இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் நம்பர் 1.
தமிழ்நாட்டின் வளர்ச்சி
வேளாண்மையை பொறுத்தவரை தனி பட்ஜெட் தாக்கல் செய்கிறோம். கல்வி என்றால் புதுமைப்பெண், நான் முதல்வன் போன்ற திட்டங்கள் காரணமாக உயர் கல்வி பயில்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தேசிய சராசரியை விடவும் தமிழ்நாடு 2 மடங்கு அதிகமாக உள்ளது. தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் 5ல் ஒரு பங்கு தமிழ்நாட்டில் இருக்கிறது.
சமூகநீதி அரசு
பள்ளிக் கல்வியில் பெரும் வளர்ச்சியை பார்க்கிறோம். மாணவர்களின் இடைநிற்றல் குறைந்துள்ளது. சத்துக் குறைபாடு குறைந்து, வருகை பதிவேட்டில் மாணவர்களின் வருகை சராசரி அதிகரித்துள்ளது. மருத்துவத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்காக ஐநா விருதை பெற்றுள்ளோம். இவற்றையெல்லாம் விட சமூக நீதி அரசை உருவாக்கி இருக்கிறோம்.
சாதனைகள் படைப்போம்
எல்லோருக்குமான ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சி நாட்டுக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறது. அடுத்து வரும் ஆண்டுகளில் நான் சொன்ன சாதனைகளை நாமே முறியடிக்கும் வகையில் பெரிய சாதனைகளை படைப்போம் என்று உறுதியாக சொல்கிறேன். இதனைதான் நமது அரசியல் எதிரிகளால் தாங்கி கொள்ள முடியவில்லை.
அதிமுக ஆட்சியின் அவலங்கள்
இதற்கு முந்தைய ஆட்சியில் என்ன நடந்தது என்பதை நினைவுபடுத்தி பாருங்கள். வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடே போராடிய போது, எடப்பாடி பழனிசாமி ஆதரித்து பேசினார். முஸ்லீம்களுக்கு எதிரான குடியுரிமை திருத்த சட்டத்தை அதிமுக ஆதரித்த ஒரே காரணத்தால் தான், அந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன்பின் நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது.
சிங்கப்பாதை
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, சாத்தான்குளம் விவகாரம் உள்ளிட்ட சம்பவங்கள் அரங்கேறின. இப்படியான இருண்ட ஆட்சியில் இருந்து 4 ஆண்டுகளில் திமுக எப்படியான மாற்றத்தை நிகழ்த்தி காட்டியிருக்கிறது என்பதை பார்க்க வேண்டும். இதுவெறும் தொடக்கம் தான். திராவிட மாடல் அரசின் 2.0 இனிதான் லோடிங். இனி நாம் செல்லும் பாதை சிங்கப்பாதையாக இருக்கும். அடுத்து வரும் ஆண்டுகளில் ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications