பலமான கூட்டணி அமைப்போம்... 30 தொகுதிகளை பிடிப்போம்... பொன். ராதாகிருஷ்ணன் தடாலடி
திருச்சி: தமிழகத்தில் 30 இடங்களை பாஜக கூட்டணி பிடிக்கும் என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது : பாஜவுடன் கூட்டணி என்பது பாஜகவை தோளில் சுமப்பது போன்றது என்ற தம்பிதுரையின் கருத்து பற்றி அவரிடம் தான் கேட்க வேண்டும்.
நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமராக மோடியை முதன்மைப்படுத்தும் கட்சியோடு கூட்டணிக்கு வாய்ப்பு உண்டு.

தமிழகத்திற்கு அதிக நிதி
அரசியலில் யார் விலகுகிறார்கள், நெருங்குகிறார்கள் என இந்த மைதானத்தில் முடிவெடுக்க இயலாது. அரசியல் நன்றாக தெரிந்தவர்களுக்கு நிலைமைகள் தொடர்ந்து மாறுவது தெரியும்.மக்கள் மீண்டும் மோடி வரவேண்டும் என்று விரும்பினால் பாஜ ஆட்சி அமையும். கஜா புயல் நிவாரணத்தை பொறுத்தவரை பிற மாநிலங்களைவிட தமிழகத்திற்கு அதிக நிதி மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது.

ஆளுமை இல்லாததை காட்டுகிறது
மேலும் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி அமைய வேண்டுமென்று துக்ளக் ஆசிரியரும், ஆடிட்டருமான குருமூர்த்தி வலியுறுத்தி உள்ளார். அது அவருடைய கருத்து. அவர் கூறியதில் தவறில்லை. கூட்டணி குறித்து பா.ஜ.க. மேலிடம் முடிவு செய்யும். இந்த நிலையில் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, தொடர்ந்து மத்திய அரசு மீது விமர்சனங்களை தெரிவித்து வருகிறார். இது அ.தி.மு.க.வுக்கு ஜெயலலிதா போன்ற ஆளுமை இல்லாததை காட்டுகிறது.

பேச்சுவார்த்தை நடத்தவில்லை
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அகியோரை ஜெயலலிதா வோடு நீங்கள்தான் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். ஜெயலலிதா, கலைஞர் போன்றோர்கள் ஆல மரங்கள். அதிலிருந்து வந்தவர்கள்தான் இப்போது உள்ள பறவைகள். அதேபோன்று மோடி தலைமையிலான பா.ஜனதாவில் நாங்களும் பறவைகளாக உள்ளோம். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக எந்த கட்சியுடனும் இதுவரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பேச்சு வார்த்தை நடத்தவில்லை.

தமிழகத்திற்கு அதிக பயன்
பா.ஜனதா தூய்மையான கட்சி. ஊழல் கரைபடியாத கட்சி. எங்களோடு கூட்டணியில் இருப்பவர்களும் அதே போன்றுதான் இருப்பார்கள். தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஏராளமான திட்டங்களை செய்து கொடுத்துள்ளது. மத்திய அரசின் திட்டங்களில் தமிழகம் தான் இந்தியாவிலேயே அதிக பயன்களை பெற்றுள்ளது.

திமுக மீது பாய்ச்சல்
10 சதவீத பொருளாதார இடஒதுக்கீட்டை எதிர்த்து தி.மு.க. நீதிமன்றம் சென்றிருப்பது கொடூரமானது. இதன் மூலம் தி.மு.க. ஏழைகளுக்கு எதிரான கட்சி என்பதை காட்டுகிறது. கொடநாடு விவகாரம் தொடர்பாக முதல்வரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி வருகிறார்கள். என் மீதே ரூ.2 ஆயிரம் கோடி ஊழல் செய்திருப்பதாக கூறி சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று கூறினார்கள்.

ஊழல் செய்யவில்லை
எனக்கு மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை. நான் ஒரு ரூபாய் கூட ஊழல் செய்திருப்பதாக நிரூபித்தால் அரசியலை விட்டே விலகிவிடுவேன். தேர்தலுக்காக கொடநாடு விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர். இதனை பரப்பியவர்கள் யார் என்று தமிழக அரசு விசாரணை நடத்தி கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications