திருவானைக்காவல் கோவில் யானை அகிலாவுக்கு நீச்சல்குளம்..கும்மாளம் பார்த்து பக்தர்கள் உற்சாகம்
திருவானைக்காவல் கோவில் யானை அகிலாவிற்காக நீச்சல் குளம் கட்டப்பட்டுள்ளது. தண்ணீருக்குள் அகிலா போடும் கும்மாளத்தைப் பார்த்து பக்தர்கள் உற்சாகத்துடன் ரசிக்கின்றனர்.
திருச்சி: யானைகள் பார்ப்பதற்கு பெரியதாக இருந்தாலும் அது செய்யும் அனைத்துமே குழந்தைத்தனமாக தான் இருக்கும். திருவானைக்காவலில் உள்ள அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் யானை அகிலா யானைப்பாகன் சொல்லும் அனைத்திற்கும் அழகாக கட்டுப்பட்டு செய்யும் செயல்கள் அனைத்துமே சற்று அதிக குழந்தைத்தனம் கொண்டதாகவே உள்ளது. இதன் காரணமாக கோவிலில் உள்ள அனைவருக்குமே அகிலா மிகவும் பிடித்து விட்டது.
Recommended Video
பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாக விளங்குவதும், கோச்செங்கட்சோழனால் கட்டப்பட்டதுமான திருவானைக்காவல் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் ஆலயம் மிகவும் பிரசித்திபெற்றது.
இந்த கோவிலில், காவிரியில் இருந்து துதிக்கை மூலம் தண்ணீர் கொண்டு வந்து யானை சிவபெருமானை வணங்கியதாக வரலாறு கூறுகிறது. அதனாலேயே இந்த கோவிலுக்கும், யானைக்கும் மிகவும் நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது.
அகிலா பிறந்தநாள்
அகிலாவிற்கு 19 வயது நிறைவுபெற்று 20வது வயதை எட்டும் நிலையில் திருக்கோவில் சார்பில் யானைக்கு பிறந்த கடந்த மே மாதம் நாள் விழா கொண்டாடப்பட்டது. கோவில் யானை தங்குமிடத்தில் இருந்து யானை அகிலா எழிலுடன் அலங்கரிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டு பின்னர் திருக்கோவில் வளாகத்தில் உள்ள நந்தவனத்தில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் முன்னிலையில் யானைக்கு கஜபூஜைகள் நடத்தப்பட்டு யானை பாகன்கள், அர்ச்சகர்கள், திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் பலரும் பங்கேற்று யானை அகிலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துப் பாடினர். பின்னர் பழங்கள், காய்கறிகள், கடலை மிட்டாய், கொழுக்கட்டை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வழங்கி யானையை மகிழ்வித்தனர்.
சுட்டித்தனம்
யானையும் பக்தர்கள் மற்றும் பலரது வாழ்த்துக்களை சமமாக பெறும் வகையில் தும்பிக்கையை ஆட்டி தனது நன்றியைத் தெரிவித்தது அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது. கோவில் யானைக்கு பிறந்தநாள் கொண்டாடிய நிகழ்ச்சியை கண்ட சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சியோடு கண்டுகளித்தனர்.
அகிலாவுக்கு நீச்சல் குளம்
இந்த அகிலா யானை இங்கு இருப்பவர்களுக்கு மட்டுமல்லாது கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் செல்லப்பிள்ளையாகஇருந்து வருகிறது. அந்த அளவுக்கு அகிலாவின் சுட்டித்தனம் அனைவரையும் பார்த்து ரசிக்க வைக்கிறது. அகிலாவுக்காக, இந்த கோவிலில் நந்தவனத்தில் நடைபாதை, நீச்சல் குளம் மற்றும் 1200 சதுர அடியில் சேற்றுக் குளியலுக்காக பள்ளம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.
துள்ளிக்குதிக்கும் அகிலா
காலை எழுந்தவுடன் அகிலாவுக்கு அங்கு அமைக்கப்பட்டிருக்கும் நீர்ச்சாரலில் குளியல், அதனையடுத்து விதவிதமான காலை உணவு. பிறகு சிறிது நேரம் ஓய்வு எடுக்கும் அகிலா மாலை நேரத்தில் நந்தவனத்தில் நடைபயிற்சி மேற்கொள்கிறது. பின்னர் அங்கே இருக்கும் நீச்சல் குளத்தில் அதனை குளிக்க வைக்கின்றனர். அந்த வகையில் நீச்சல் குளத்தில் நீரை பார்த்ததுமே, துள்ளி குதிக்கும் அகிலா அழகாக நீச்சலடித்து கும்மாளம் போடுவது அனைவரையும் வியக்க வைக்கிறது.
சேட்டை செய்யும் அகிலா
அகிலா ஜாலியாக நீச்சல் குளத்தில் நீச்சல் அடிப்பதை சுற்றியிருப்பவர்கள் கண்கொட்டாமல் வேடிக்கை பார்க்கின்றனர். யானை பாகனின் கட்டளைக்கு அழகாக கீழ்படியும் அகிலா, செய்யும் செயல்கள் அனைத்துமே கோவிலுக்கு வரும் பக்தர்களை வியக்க வைக்கிறது. மேலும் அவ்வப்போது சில சில சேட்டைகள் செய்து அனைவரையுமே ரசிக்க வைக்கிறாள் செல்லக்குட்டி அகிலா.