துறையூரில் ஆம்புலன்ஸை விரட்டியடித்த அதிமுகவினர்.. “மனிதநேயமற்ற செயல்” - செல்வப்பெருந்தகை கண்டனம்
திருச்சி: திருச்சி துறையூரில் ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கியவர்களை மீட்க ஆம்புலன்ஸ் ஒன்று, அதிமுக கூட்டம் நடந்த பகுதியின் வழியாக செல்ல முயன்றது. ஆனால் ஆம்புலன்ஸை தடுத்து நிறுத்தி அதிமுகவினர், அதை வந்த வழியாகவே விரட்டினர். இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
திருச்சி மாவட்டம் துறையூரில் அதிமுகவினர் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று வந்த நிலையில், அதை மறித்த அதிமுகவினர் ஓட்டுநரை தாக்க முயன்றுள்ளனர். ஆம்புலன்ஸில் பின்புறம் சோதனையிட்ட அவர்கள், சில பொருட்களை சேதப்படுத்தவும் முயன்றுள்ளதாக சொல்லப்படுகிறது. பின்னர் வந்த வழியாகவே ஆம்புலன்ஸ் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறது.

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள செல்வப்பெருந்தகை, "இன்று திருச்சி துறையூரில் ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கியவர்களை உயிர் காப்பாற்றும் நோக்கில் விரைந்து சென்ற ஆம்புலன்ஸை அஇஅதிமுகவினர் வழிமறித்து தடுத்து நிறுத்திய சம்பவம் மிகக் கடுமையான, மனித நேயமற்ற செயல் ஆகும்.
அவசர சிகிச்சை பெற வேண்டிய உயிர்களை அரசியல் சண்டை, அல்லது குறுகிய மனப்பான்மையால் தடுக்க முயன்றது மனித நாகரிகத்திற்கே கேள்விக்குறியாகும். மனித உயிரை விட அரசியலுக்கு முன்னுரிமை கொடுப்பது மனிதாபிமானத்துக்கு எதிரானது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் இந்த அராஜகச் செயலுக்கு எனது வன்மையான கண்டனங்களை பதிவு செய்கிறேன். மனித உயிர் ஆபத்தில் இருக்கும் நேரங்களில் ஆம்புலன்ஸின் சுதந்திர உரிமையைத் தடுக்க நினைப்பது சட்ட ரீதியாகவும் குற்றமாகும்.
எடப்பாடி பிராச்சாரத்தில்
— திராவிடன் மீரான் திமுக (@DmkMeeranbabu) August 24, 2025
சற்று முன் திருச்சி துறையூர் பைபாஸ் சாலையில் நிகழ்ந்த விபத்தில் உயிருக்கு போராடியவர்களை மீட்க சென்ற ஆம்புலன்ஸ் வாகனம் அதிமுகவினர் வழிமறித்து அராஜகம் செய்ததால்...
விபத்தில் பாதிக்கபட்டவர்கள் மருத்துவமனை செல்ல முடியாத அவலம்.@Udhaystalin@mkstalin pic.twitter.com/Jj3xOdtrin
அஇஅதிமுகவினர் செய்த இந்த மிரட்டல் அரசியலை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள். சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உடனடி சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாத வகையில் அரசு தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்" என்று கூறியிருக்கிறார்.
முன்னதாக வேலூர் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டிருந்த போது 108 ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. அதிமுக கூட்டத்தில் நெரிசலை ஏற்படுத்த ஆம்புலன்ஸை திமுக திட்டமிட்டே அனுப்புவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியிருந்தார். மட்டுமல்லாது அடுத்த முறை ஆம்புலன்ஸில் நோயாளி இல்லாமல் வந்தால், அதில் ஓட்டுநர் நோயாளியாக படுக்க வைக்கப்பட்டு அனுப்பப்படுவார் என்று மிரட்டும் தொணியில் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications