காதல் திருமணம் செய்த மகள் மீது மண்ணை அள்ளி வீசி சாபமிட்ட தாய்.. காவல் நிலையத்தில் கதறல்
திருச்சி: திருச்சி மாவட்டம் துறையூர் காவல் நிலையத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட பெண்ணின் தாயார்,தன் மகளை ஒப்படைக்க போராடியதோடு மயங்கி விழுந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது. ஆசையாய் பார்த்து பார்த்து வளர்த்த பெண் காதல் திருமணம் செய்து கொண்டு, பெற்றோரை கைவிட்டு சென்றதால், அந்த தாய் கதறி அழுத படி, மண்ணை அள்ளி வீசி சாபமிட்டார்.
காதல் திருமணம் என்பது பிள்ளைகளுக்கு மகிழ்ச்சியையும், பெற்றோருக்கு தீராத வலியையும் தருகிறது.இதற்கு காரணம் ஆசையாய் பார்த்து பார்த்து வளர்த்த பெண் திடீரென, ஒரு வருடம் கூட பழகாத காதலனை நம்பி சென்றுவிடுகிறார். எங்கு தனக்கு பிடித்தவரை திருமணம் செய்யவிடாமல் தடுத்துவிடுவார்களோ என்று எண்ணி வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்கிறார்கள்.

ஆனால் வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்யும் அவர்களை, இரு வீட்டு பெற்றோரும் ஏற்காமல் போனால் வாழ்க்கை நிச்சயம் நரகம் ஆகிவிடும். ஒரு வேளை ஏற்றுக்கொண்டாலும், திருமணம் செய்த இளைஞர், வயது கோளாறில், காமத்திற்கு பழகி இருந்திருந்தால் சில நாட்களிலேயே எதார்த்தமான வாழ்க்கை பிடிக்காமல் அடிக்கடி சண்டை போட வாய்ப்பு உள்ளது. மது பழக்கம் உள்ளவர் என்றால் சொல்லவே வேண்டாம். இன்னும் மோசமாகிவிடும். சரியான வேலையில் இல்லாமல் குடிப்பழக்கம் உள்ள இளைஞர் என்றால், அந்த பெண் தன் தலையில் மண்ணை அள்ளி போட்டதற்கு சமமாகிவிடும் அந்த காதல் திருமணம்.
காதல் திருமணம் என்பது ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ்வது. ஆணுக்காக பெண்ணும், பெண்ணுக்காக ஆணும் விட்டுக்கொடுத்து வாழ்வது. எனவே இதற்கு பெற்றோர் சம்மதிக்கும் வரை காத்திருந்து அவர்களுக்கு புரிய வைத்து திருமணம் செய்வது சிறப்பாக இருக்கும் என்பது பல பெற்றோரின் கருத்தாக உள்ளது.
சரி விஷயத்திற்கு வருவோம். கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டத்திலுள்ள பென்னாகரம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன், இவரது மகள் ஸ்ரீ பவானி அதே ஊரைச் சேர்ந்த கார்த்திக் என்பவருடன் காதல் ஏற்பட்டு கல்யாணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் இருவரும் ஊரை விட்டு மாயமான நிலையில், பெண்ணின் பெற்றோர் மகளை காணவில்லை என்று சொந்த ஊரான பெண்ணாடம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். மேலும் பெண்ணை மீட்டு தரக்கோரி ஆட்கொணர்வு வழக்கு தொடர்ந்துள்ளார்கள்.
இந்நிலையில் ஸ்ரீபவானி மற்றும் கார்த்திக் ஆகியோர் துறையூர் வடக்கு தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து குடியிருந்து வந்தது பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து பெண்ணின் பெற்றோர் இருவரையும் பிடித்து துறையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கார்த்திக் திருமண வயதை எட்டாத நிலையில் அது குறித்தும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஸ்ரீபவானியின் பெற்றோர் தங்கள் மகளை தங்களுடன் அனுப்பி வைக்கும்படி கதறி அழுதிருக்கிறார். அப்போது கார்த்திக் பெண்ணின் தாய் சுமதியின் கையை பலமாக தாக்கியதாக கூறப்படுகிறது. அதனால் பெண்ணின் தாயாரின் கையில் இருந்து ரத்தம் வழிந்தது. காவல் நிலைய வாசலில் மயக்கம் அடைந்து சுமதி கீழே விழுந்தார். இதையடுத்து அவரது கணவர் சுந்தர்ராஜன் துறையூர் காவல் நிலையத்தில் கார்த்திக் மீது புகார் கொடுத்தார்.

பின்னர் சுமதி 108 ஆம்புலன்ஸ் மூலம் துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். காவல் நிலையம் முன்பே பெண்ணின் தாயார் கையில் காயத்துடன் கீழே விழுந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். காதல் திருமணம் செய்த மகள் மீது மண்ணை அள்ளி வீசி தாய் சாபமிட்ட வீடியோ சமூக ஊடங்களில் வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications