லஞ்சப் பணத்தை வாரி சுருட்டிய ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர்! தட்டி தூக்கிய லஞ்ச ஒழிப்புத் துறை
திருச்சி: லஞ்ச வேட்டையாடி உண்டு கொழுத்த அரசு அலுவலர் ஒருவரை ரூ.40 லட்சம் பணத்துடன் கையும் களவுமாக மடக்கியுள்ளது லஞ்ச ஒழிப்புத்துறை.
வாயை கட்டி வயிற்றைக் கட்டி பிழைப்பு நடத்தி வரும் சாதாரண பொதுமக்களிடம் அட்டைப்பூச்சி ரத்தத்தை உறிஞ்சி எடுப்பதை போல் லஞ்சம் பெறும் நிகழ்வுகள் இன்னும் தொடர்கதையாக தான் இருக்கின்றன.
இந்தச் சூழலில் திருச்சி மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சரவணக்குமாரை ரூ.40 லட்சம் பணத்துடன் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

அரசு அலுவலர்
திருச்சி மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சரவணக்குமார் கட்டைப்பையில் கட்டுக்கட்டாக பணத்தை எடுத்துக்கொண்டு அரசு அதிகாரி என்ற மிதப்பில் காரில் சென்னை சென்று கொண்டிருந்திருக்கிறார். விழுப்புரம் மாவட்டம் கெடிலம் அருகே சரவணக்குமார் காரை மறித்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் கார் முழுவதும் சோதனை செய்துள்ளனர். அதில் ரூ.40 லட்சம் பணம் கட்டுக்கட்டாக சட்டைப்பையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

லஞ்சப் பணம்
இதையடுத்து முன்னுக்கு பின் முரணாக பேசிய அந்த அரசு அலுவலரை சுற்றி வளைத்து அழைத்துச்சென்று துருவி துருவி கேள்விக்கணைகளால் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம் செய்த அச்சம் சிறிதும் இல்லாமல் அந்த அரசு அலுவலர் ஜம்பமாக அமர்ந்திருக்கும் வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன. அரசு அலுவலருக்கு இவ்வளவு பெரிய தொகை எங்கிருந்து கிடைத்தது அதை எங்கு எடுத்துச் சென்றார் என்ற விவரம் இன்னும் கிடைக்கவில்லை.

பாராட்டு குவிகிறது
விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் குழுவுக்கு பாராட்டுகள் குவிகின்றன. ஏனெனில் அவர்கள் நினைத்திருந்தால் அந்த அரசு அலுவலரை தப்ப விட்டிருக்க முடியும். ஆனால் எதற்கும் அஞ்சாமல் லஞ்சப் பணத்தை பறிமுதல் செய்து ஊழல் மன்னனை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார்கள் அவர்கள்.

அரசுக்கு அவப்பெயர்
நேர்மையான முறையில் ஆட்சியை வழிநடத்திச் செல்ல வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் ஒருபக்கம் உறுதியோடு செயல்பட்டு வரும் நிலையில், இது போன்ற லஞ்ச வேடையாடுபவர்களால் அரசுக்கும் சேர்த்து அவப்பெயர் ஏற்படுகிறது. இதனிடையே இது போன்ற குற்றச்சாட்டுகளில் சிக்குபவர்களை விசாரணை நடத்தி நிகழ்வு உண்மை என்ன என்பது தெரியவந்தால் நிரந்தரமாக அரசுப் பணியை விட்டு அகற்ற வேண்டும் என்பதே இன்றை இளைய தலைமுறைகளின் கோரிக்கையாக உள்ளது.












Click it and Unblock the Notifications