திருச்சியில் புதிய வீடு கட்ட மின் இணைப்பு.. ஒரு நொடி சலனம்.. கம்பி எண்ணும் அதிகாரி
திருச்சி: திருச்சி செங்குறிச்சியை சேர்ந்த பிரவின்குமார் என்பவர் மணிகண்டம் மேக்குடி கிராமத்தில் வீடு கட்ட இருக்கும் கோவிந்தராஜ் என்பவருக்காக தற்காலிக மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்தார். அதன் பேரில் தற்காலிக மின் இணைப்பு வழங்க ஏற்பாடு செய்ய மின் வாரிய அலுவலகத்தில் வணிக ஆய்வாளர் அருளானந்தம் என்பவரை அணுகினார். அப்போது அருளானந்தம் மின் இணைப்பு வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம். அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
புதிய வீடு கட்டுவதற்கு தற்காலிக மின் இணைப்பு பெற, அந்தந்த ஊர்களில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் லஞ்சமே கொடுக்காமல் எளிதாக விண்ணப்பிக்கலாம். தேவையான ஆவணங்கள் மற்றும் படிவங்களை சமர்ப்பித்து, கட்டணம் செலுத்திய பின் தற்காலிக இணைப்பு வழங்கப்படும் நடைமுறை தமிழ்நாட்டில் இருக்கிறது.

தற்காலிக மின் இணைப்பு பெறுவதற்கு மின்சார வாரிய அலுவலகத்தில், தற்காலிக மின் இணைப்புக்கான விண்ணப்ப படிவத்தை பெற்று, பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். வீட்டின் உரிமையாளராக இருந்தால், சொத்து வரி ரசீது மற்றும் ஆதார் அட்டை நகல் சமர்ப்பிக்க வேண்டும்.
வீட்டின் உரிமையாளர் இல்லையெனில், உரிமையாளரிடம் இருந்து கடிதம் அல்லது நீங்கள் அந்த வீட்டில்தான் வசிக்கிறீர்கள் என்பதற்கான சான்று சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவத்துடன், தற்காலிக இணைப்புக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.
அப்படி கட்டணம் செலுத்திய பிறகு, மின்சார வாரியம் தற்காலிக மின் இணைப்பை வழங்கிவிடும்.இது கட்டிடம் கட்டி முடிக்கும் வரை தான் வழங்கப்படும். கட்டுமான பணிகள் முடிந்ததும், நிரந்தர மின் இணைப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும். இது பொதுவான நடைமுறையாகும் . ஆனால் புதிய வீடு கட்ட தற்காலிக மின்இணைப்பு வேண்டி விண்ணப்பித்தவர்களிடம் லஞ்சம் வாங்கும் சம்பவங்கள் ஆங்காங்கே நடக்கிறது. அந்த வகையில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய வணிக ஆய்வாளரை திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
திருச்சி செங்குறிச்சியை சேர்ந்த 35 வயதாகும் பிரவின்குமார் என்பவர் கட்டிடங்களுக்கு மின் வயரிங் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர் திருச்சி மணிகண்டம் மேக்குடி கிராமத்தில் வீடு கட்ட இருக்கும் கோவிந்தராஜ் என்பவருக்காக அவரது வீட்டுமனைக்கு தற்காலிக மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்திருக்கிறார். அதன்பேரில் தற்காலிக மின் இணைப்பு வழங்க ஏற்பாடு செய்ய திருச்சி மணிகண்டம் மின்வாரிய அலுவலகத்தில் வணிக ஆய்வாளரான 48 வயதாகும் அருளானந்தம் என்பவரை அணுகினார்.
அப்போது அருளானந்தம் மின் இணைப்பு வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று கேட்டாராம். லஞ்சம் கொடுக்க விரும்பாத பிரவின்குமார் திருச்சி லஞ்ச ஒழிப்பு பிரிவு அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார், பிரவின்குமாரிடம் அருளானந்தம் கேட்ட லஞ்சப்பணத்தை கொடுக்கும்படி ரசாயனம் தடவிய நோட்டுகளை தந்து அறிவுறுத்தினர்.
அதன்படி நேற்று காலை பிரவின்குமார் வணிக ஆய்வாளர் அருளானந்தத்திடம் ரசாயனபொடி தடவிய லஞ்சப்பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி மணிகண்டன், இன்ஸ்பெக்டர்கள் சக்திவேல், பிரசன்னவெங்கடேஷ், சேவியர்ராணி உள்ளிட்ட போலீசார், அருளானந்தத்தை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரிடம் மணிகண்டம் மின்வாரிய அலுவலகத்தில் விசாரணை நடத்தி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications