துரை வைகோ உறுதியால்.. சின்னம் என்னனே தெரியல.. பிரச்சாரத்தில் சுணங்கிய திமுக கூட்டணி.. திருச்சியில்!
திருச்சி: திருச்சியில் மதிமுக வேட்பாளர் துரை வைகோ சின்னம் இல்லாமல் பிரச்சாரத்தில் சுணக்கம் காட்டி வரும் நிலையில், இரட்டை இலைக்கு வாக்கு கேட்டு சூறாவளியாக சுற்றி வந்துகொண்டிருக்கிறார் அதிமுக வேட்பாளர்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஒட்டுமொத்தமாக லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது.

ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க துவங்கிவிட்டது. தமிழகத்தில் கடந்த 19ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. வேட்புமனு தாக்கல் 27ம் தேதி முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது.
39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்ட நிலையில்
664 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 1085 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர். இதில் 56 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. குறைந்த பட்சமாக நாகை லோக்சபா தொகுதியில் 9 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வேட்புமனுக்களை திரும்ப பெற மார்ச் 30ஆம் தேதி நாளை கடைசி நாள் ஆகும்.
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் மதிமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, அமமுக மற்றும் பல்வேறு கட்சியினர் சுயேசைகள் உட்பட 48 பேர் வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தனர். இதில் நேற்று நடைபெற்ற வேட்பு மனுக்கள் பரிசீலனையில் 10 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு தற்போது 38 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
நாளை வேட்பு மனுக்கள் திரும்ப பெறப்பட்டால் எத்தனை பேர் இறுதியில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவார்கள் என்று மதியம் தெரிந்து விடும். இந்நிலையில் திருச்சியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கருப்பையா இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு சூறாவளியாக திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வாக்கு சேகரித்து வருகிறார்.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுக பம்பரம் சின்னம் கிடைக்காததால் அவர்கள் பிரச்சாரத்தில் சுணக்கம் ஏற்பட்டு தற்போது வேட்பாளராக போட்டியிடும் துரை வைகோ திருச்சியில் உள்ள கூட்டணி கட்சி தலைவர்களையும், வணிகர்கள், மத தலைவர்கள் மற்றும் முக்கிய நபர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
தங்களுக்கு சின்னம் கிடைக்கப் பெற்ற உடன் தங்களது பிரச்சாரத்தில் சூடு பிடிக்கும் என அக்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு திமுகவினர் அறிவுறுத்தியும், தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என உறுதியாக தெரிவித்து விட்டார் துரை வைகோ.
நாளை மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும்போது, வேட்பாளர்களின் சின்னம் அறிவிக்கப்படும். துரை வைகோ, தீப்பெட்டி அல்லது கேஸ் சிலிண்டர் சின்னத்தை கேட்டிருப்பதாகத் தெரிகிறது. அவருக்கு எந்த சின்னம் ஒதுக்கப்படும் என்பது நாளை மாலை தெரிந்துவிடும். அதன்பிறகு துரை வைகோவின் பிரச்சாரம் சூடுபிடிக்கும் எனத் தெரிகிறது.
டிடிவி தினகரனின் அமமுக கட்சியின் சார்பில் போட்டியிடும் பாஜக கூட்டணி வேட்பாளர் செந்தில்நாதன் குக்கர் சின்னத்திற்கும், நாம் தமிழர் கட்சியில் போட்டியிடும் ராஜேஷ் மைக் சின்னத்திற்கும் வாக்கு கேட்டு தங்களது அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications